Skip to main content

நாமக்கல்லில் ஒரே நாளில் 2 கர்ப்பிணிகள் உள்பட 15 பேருக்கு கரோனா!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

namakkal district coronavirus strength increased


நாமக்கல் மாவட்டத்தில் ஆறு நாள்களாக புதிதாக கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 15 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
 

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 28- ஆம் தேதி வரை 61 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்து வந்தது. இவர்களில் 50 பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து, வீடு திரும்பினர். 7 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 4 பேர் சேலம் அரசு மருத்துவமனையிலும் தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 6 நாள்களாக நாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக மாவட்டம் முழுவதும் 14 சோதனைச்சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வந்த லாரி ஓட்டுநர்கள், சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு என மொத்தம் 270 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சோதனைச்சாவடி அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 3) பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 15 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது திங்கள்கிழமை (மே 4) உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் 2 பேர் கர்ப்பிணிப் பெண்கள். மற்ற 13 பேரும் ரெட்டிப்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிப்பாளையம், திம்மநாயக்கன்பட்டி, ரெட்டிப்புதூர், வெடியரம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். 


புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளான 15 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து திங்களன்று இரவு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட இரு பெண்கள் தவிர மற்ற 13 பேரும் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். தொடர் சிகச்சைக்காக அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதுடன், தடுப்புக் கட்டைகள் வைத்தும் மூடப்பட்டது. 

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 51 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 12 கிராமங்கள் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது ஒரே நாளில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

http://onelink.to/nknapp



இதற்கிடையே, ஊரடங்கு தளர்த்தப்பட்டு தனிநபர் கடைகள், முழு நேர உணவகங்கள், செல்போன் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இது மேலும் நோய்த்தொற்றை அதிகரிக்கச் செய்யுமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவரால் உயிருக்குப் போராடும் இளம் பெண்! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Erode district thalavadi government doctor made wrong operation to woman

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வசிக்கும் ஓட்டுநர் பிரதீப்குமாரின் மனைவி அனுபல்லவி. வயது 25. இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு செய்யப்போய் தனக்கு நேர்ந்த அவலத்தை அனுபல்லவியே நம்மிடம் கூறுகிறார்.

“என்னுடைய வீட்டுக்காரர் டிரைவர். குடும்ப வறுமை காரணமா பெண் குழந்தைகளே போதுமென்று முடிவுசெய்து குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவுசெய்தோம். தாளவாடி அரசு மருத்துவமனையில் 2022, பிப்ரவரி 22-ஆம் தேதி அட்மிட்டானேன். 28 ஆம் தேதி 8 பேருக்கு ஆபரேஷன் செய்தாங்க. என்னைத் தவிர 7 பெண்களும் டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப் போய்ட்டாங்க.

எனக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு அபாய கட்டத்துக்குச் சென்றேன். அவசர அவசரமா என்னை ஆம்புலன்ஸ்ல ஏத்தி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. அங்க 25 நாட்கள் ஐ.சி.யூ.வில் இருந்தேன். பிறகுதான் சுயநினைவே வந்தது.

தாளவாடி அரசு மருத்துவமனையில் எனக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த டாக்டர் என்ன செய்தாரோ தெரியலை. இதயத்துக்குச் செல்லும் அயோட்டா என்ற ரத்தப்போக்கு லேயரை (நரம்பை) துண்டித்து விட்டதாகவும் அதனைச் சரி செய்ய முடியாது. உயிருக்கு ஆபத்தானது என்றும் கோயம்புத்தூர் டாக்டர்கள் கூறினார்கள்.

இப்ப என்னால எந்த வேலையும் செய்யமுடியாது. இரண்டு குழந்தைகள் இருக்குது. என்னுடைய தாயார் வீட்டில்தான் இருக்கிறேன். அடிக்கடி வாந்தி, மயக்கம் இப்படி ஏதேதோ பல்வேறு தொந்தரவுகள், உபாதைகள் இருந்துக்கிட்டே இருக்குது. தாளவாடி டாக்டர்கள் தவறான ஆபரேஷன் செய்ததன் விளைவு நான் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடிக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம், அதற்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்கள். கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் பணத்திற்கு எங்கே செல்வோம்? என்னை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான அறுவை சிகிச்சையை அரசாங்கம் செய்யவேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த அந்த மருத்துவரை தண்டிக்க வேண்டும். அரசு மருத்துவமனையை நம்பிச் சென்று குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தேன். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கவனத்திற்கு நக்கீரன் மூலமாக கொண்டுசென்று எனக்கு உரிய நீதியும், நிவாரணமும் பெற்றுத் தாருங்கள்” என்றார் பாதிக்கப்பட்ட அனுபல்லவி.

ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவிடமும் மனு கொடுத்தார். மருத்துவர் குழுவை அழைத்து உடனடியாக என்ன செய்யவேண்டும் என பாருங்கள் என்றார். அந்த மருத்துவர்கள் குழு அறிக்கை தருவதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டது.

அரசு மருத்துவர்களால் பாதிப்புக்குள்ளான அனுபல்லவிக்கு தாமதமின்றி நீதியும், நிவாரணமும் கிடைக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உதவுவாரா?

Next Story

உரிய மருத்துவம் அளிக்கவில்லை.. அரசு மருத்துவமனை முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Not providing proper medicine.. Lawyers struggle in front of government hospital

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாரத்பாபு. இவர், ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 22.ந் தேதி முதுகு வலி காரணமாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக உரிய மருத்துவம் அளிக்காமல் பணியிலிருந்த மருத்துவர் பிரவீன்குமார், உடன் இருந்த உறவினர்களுக்கு எந்தவித நோய் குறித்த தகவலையும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.  

இந்நிலையில், 5 நாட்களுக்கு பிறகு கடந்த 29.ந் தேதி பணியிலிருந்த மருத்துவர், வழக்கறிஞரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற சில மணி நேரத்தில் வழக்கறிஞர் பாரத்பாபு உயிரிழந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ஆம்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு நான்கு நாட்களாக உரிய மருத்துவம் அளிக்காமல் உறவினர்களுக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் அலைக்கழித்து வந்த மருத்துவர் பிரவின்குமாரை கண்டித்து அவரை கைது செய்யக் கோரி அரசு மருத்துவமனை முன்பு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Not providing proper medicine.. Lawyers struggle in front of government hospital

பின்னர் அங்கு வந்த காவல்துறையினரிடம் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக மருத்துவ அலுவலரிடம் புகார் அளிக்க சென்ற போது, அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் இல்லாததால் மருத்துவ அலுவலர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் வந்த பணி மருத்துவர் யோகேஸ்வரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கு முறையான பதில் அளிக்காததால் அங்குப் பணி மருத்துவரிடம்  வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Not providing proper medicine.. Lawyers struggle in front of government hospital

இது தொடர்பாக வழக்கறிஞர் மதிவண்ணன், அரசு மருத்துவமனையில் சாதாரண முதுகு வலிக்காக சேர்க்கப்பட்ட வழக்கறிஞருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் நான்கு நாட்களாக காலம் தாழ்த்தி உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் பிரவீன்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் எனவும், அரசு மருத்துவமனைகளில் தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடு எந்த நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய  அவர் வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பாமர மக்களுக்கு எந்த அளவில் மருத்துவம் பார்ப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.