Skip to main content

நாமக்கல் அரசு அலுவலக இரவு காவலாளி கொடூர கொலை; தூக்கில் சடலத்தை தொங்கவிட்டு மர்ம நபர்கள் வெறிச்செயல்

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Namakkal company guard passed away

 

நாமக்கல் அருகே, அரசு அலுவலக இரவுக் காவலாளி ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்துவிட்டு, சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், சின்ன அரியாகவுண்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (60). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இவர், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். செப். 18ம் தேதி இரவு அவர் வழக்கம்போல் பணிக்கு வந்தார். அந்தப் பகுதியில் சில நாட்களாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அங்கிருந்த ஜே.சி.பி இயந்திர ஆப்ரேட்டருடன் அதிகாலை 2 மணி வரை பரமசிவம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

 

இந்நிலையில், திங்கள் கிழமை (செப். 19) அதிகாலை 5.30 மணியளவில் தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு வந்தனர். அவர்கள், இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் இருந்த இரும்பு கம்பியில் பரமசிவம் தூக்கில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு திடுக்கிட்டனர். அவருடைய கால்கள் கயிறால் கட்டப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் பரமசிவத்தின் உடலை இரும்பு கம்பியோடு பிணைத்து கயிறால் கட்டியிருந்தனர். 

 

இதுகுறித்து அவர்கள் பரமசிவத்தின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். உறவினர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு நீண்ட நேரம் ஆனதால் பரமசிவத்தின் உறவினர்கள், ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். 

 

அவர்கள், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த பரமசிவத்தின் உடலை காணொளியாகவும், படமாகவும் எடுத்து வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். காட்டுத்தீ போல பரவிய இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தார். பரமசிவத்தின் உறவினர்கள் கூறுகையில், ''இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் உள்ளனர். அவ்வாறு இருக்கும்போது அரசு அலுவலகத்திலேயே ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளியை கைது செய்யும் வரை சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம்,'' என்றனர். 


மாவட்ட எஸ்.பி, அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளியை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்தார். அதன்பின் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் பரமசிவத்தை முதலில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்கிறார்கள். 


பரமசிவத்திற்கும் வேறு யாருக்கும் முன் விரோதம் உள்ளதா? கடன் பிரச்சனையில் ஏதேனும் சிக்கி இருந்தாரா? குடும்பப் பின்னணி என காவல்துறையினர் பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர். 


சம்பவ இடத்தை ஒட்டிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அவரிடம் கடைசியாக பேசிவிட்டுப் போன ஜேசிபி வாகன ஆபரேட்டரிடமும் விசாரணை நடந்து வருகிறது. அதிகாலை 2 மணிக்கு மேல்தான் கொலை நடந்திருக்க வேண்டும் என்பதால், அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாராவது வந்து சென்றார்களா? என காவல்துறையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.