பறவைக் காய்ச்சலால் கோழி விலை சரிவு!

namakkal chicken rate decrease bird flu issues

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரளாவின் ஆலப்புழா நகரிலுள்ள ஏரிக்கரையோரம், வாத்துகள் கொத்துக் கொத்தாக திடீரென்று செத்து விழுந்தன. தொடர்ந்து கோட்டயம் பகுதியிலுள்ள வாத்துகள் இரையெடுக்க முடியாமல் செத்து மடிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து கேரள கால்நடைத்துறையின் இயக்குனர் குழு, ஸ்பாட்டிற்கு விரைந்து வந்து மடிந்த வாத்துகளை உடற்கூறாய்வு செய்ததில், பறவைக் காய்ச்சலுக்கான வைரஸ் தாக்குதல் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனால், தடுப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்துகள் கொண்டு வர தடை விதித்துள்ள தமிழக கால்நடைத்துறை, எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மேலும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிக்கப்பட்டப் பின்பே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கேரள பண்ணைக் கோழிகளைத் தமிழக எல்லைகளில் உள்ள கிராமங்களில் விற்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக, நாமக்கல் கோழி பண்ணைகளில் ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூபாய் 14 குறைந்து ரூபாய் 78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பறவைக் காய்ச்சல் பீதியால் கேரளாவுக்கு ஏற்றுமதி குறைந்ததையடுத்து கறிக்கோழி விலை சரிந்துள்ளது.

ஏற்கனவே பறவைக்காய்ச்சல் காரணமாக நாமக்கல் பண்ணைகளில் முட்டை விலை குறைந்த விலையில் விற்பனையாகிறது.

BIRD FLU chicken
இதையும் படியுங்கள்
Subscribe