nalini, murugan whatsapp video call chennai high court

Advertisment

நளினி மற்றும் முருகனை வாட்ஸ்- அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.அந்த வழக்கில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்- அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும். மேலும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். ஏற்கனவே, காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் முருகன் பார்ப்பதற்கு, தமிழக அரசு அனுமதிக்காததையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அயல்நாடுகளில் இருப்பதால், இது மத்திய வெளிவிவகாரத்துறை சம்பந்தபட்டது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.