Skip to main content

நளினி சிதம்பரத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு உத்தரவு

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
n c

 

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீடு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் நிதி நிறுவனம், பொது மக்களிடம்  கோடிக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.

 

இந்த சம்மனை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, நளினி சிதம்பரத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

 

இதன் அடிப்படையில், ஜூலை 11 ஆம் தேதி கொல்கத்தாவில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது.

 

இந்த சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு  விசாரணை நடைபெற்று வந்தது. நளினி சிதம்பரம் தரப்பில் ஆஜரான டில்லி மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ் துள்சி, பெண்ணான நளினியை வேறு மாநிலத்திற்கு விசாரணைக்கு அழைக்க முடியாது எனவும், சென்னை வந்து தான் விசாரிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

 

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், நளினி சிதம்பரத்தின் மேல் முறையீடு மனுவையும் தள்ளுபடி செய்து மீண்டும் சம்மன் அனுப்பவும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இதற்கு காரணமே ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான்” - அமைச்சர் செல்லூர் ராஜு

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

Sellur Raju said that Nalini Chidambaram was the main reason for NEET exam

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஏறத்தாழ அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர். 

 

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளரான தமாகா - பாஜக கூட்டணி வேட்பாளர் தென்னரசுவிற்கு வாக்கு சேகரிக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஈரோடு கிழக்கு அண்ணாமலையார் வீதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து  பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், யாருமே பிரச்சினைகளைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள். அடிமை சாசனத்தை திமுகவிற்கு எழுதி கொடுத்து இன்று தமிழ்நாட்டில் நடக்கும் அட்டூழியங்களுக்கு கூட்டணி கட்சிகள் துணை போகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் கூட்டணி கட்சிகள் வெறுப்பே சம்பாதிக்கிறது என்பது தெரிகிறது. மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் தராமல் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டுவதும், திட்டத்தை மக்களுக்கு தராமல் தன் தகப்பனாருக்கு 100 கோடியில் நூலகம் அமைப்பது  84 கோடி பேனா அமைப்பது என மக்கள் வெறுப்பை திமுக சம்பாதித்து கொண்டுள்ளது. 

 

நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் ஆட்சி தான் இருந்தது அன்று. காந்திசெல்வன்  திமுகவின் இணை அமைச்சர் கையெழுத்து போட்டுள்ளார். எல்லாம் மறந்துவிட்டு பேசுகிறார்கள். இந்த நீட் தொடர்ந்து இருப்பதற்கு காரணமே காங்கிரஸ். ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்காடி இந்த நீட் வருவதற்கு காரணமாக இருந்தவர்” எனக் கூறினார்.

 

 

Next Story

'சி.ஏ.ஏ. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது' - நளினி சிதம்பரம்

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

சி.ஏ.ஏ. சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற மாட்டார்கள் என மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நிதியமைச்சரின் மனைவியுமான  நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

Nalini Chidambaram

 



சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,  இத்தகைய சட்டங்களைக் கொண்டு வருவதால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதிக்கப்படுகிறது என்றும் இதிலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் ஈடுப்பட்டனர். இதில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் வைகை, நளினி சிதம்பரம், என்.ஜி.ஆர். பிரசாத், கண்ணதாசன், சுதா ஆகியோர் கழுத்தில் பதாகைகளை ஏந்தி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் பின்னர் பேட்டியளித்த நளினி சிதம்பரம், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டமானது இந்துக்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு ஆதாரவாகவும் நடத்தப்படும் போராட்டம் அல்ல என்றார். பின்னர் சட்டங்கள்,  அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., சட்டங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், இத்தகைய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற மாட்டார்கள். அது தங்கள் கோரிக்கையும் இல்லை என தெரிவித்தார்.