Skip to main content

மே-7ல் நளினி சிதம்பரம் ஆஜராக உத்தரவு

Published on 30/04/2018 | Edited on 30/04/2018
nalini1

 

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மே-7ம் தேதிக்குள் நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.   சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

  

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் ஆஜரானார். அதற்கான கட்டணமாக அவர் ரூ.1 கோடி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. சாரதா சிட்பண்ட் மோசடி வழக்குகளை விசாரிக்கும் அமலாக்கத் துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக அவருக்கு கடந்த 2016 செப்டம்பரில் சம்மன் அனுப்பினர்.

 

இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, சம்மனுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து வயதானவர்கள், நேரில் ஆஜராக முடியாதவர்கள், படுத்த படுக்கையாக இருப்பவர்கள் மட்டுமே விதிவிலக்கு கோர முடியும். மூத்த வழக்கறிஞரான நளினி சிதம்பரம், உச்ச நீதிமன்றம் மட்டுமின்றி பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் ஆஜராகி வருபவர். இதை அவரே தனது மனுவில் கூறியுள்ளார். உண்மையை வெளியே கொண்டு வர சம்மன் அனுப்பி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது.எனவே, அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை புதிதாக சம்மன் அனுப்ப வேண்டும் உத்தரவிடப்பட்டது.

 

இதையடுத்து  மே-7ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதற்கு காரணமே ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான்” - அமைச்சர் செல்லூர் ராஜு

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

Sellur Raju said that Nalini Chidambaram was the main reason for NEET exam

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஏறத்தாழ அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர். 

 

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளரான தமாகா - பாஜக கூட்டணி வேட்பாளர் தென்னரசுவிற்கு வாக்கு சேகரிக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஈரோடு கிழக்கு அண்ணாமலையார் வீதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து  பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், யாருமே பிரச்சினைகளைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள். அடிமை சாசனத்தை திமுகவிற்கு எழுதி கொடுத்து இன்று தமிழ்நாட்டில் நடக்கும் அட்டூழியங்களுக்கு கூட்டணி கட்சிகள் துணை போகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் கூட்டணி கட்சிகள் வெறுப்பே சம்பாதிக்கிறது என்பது தெரிகிறது. மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் தராமல் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டுவதும், திட்டத்தை மக்களுக்கு தராமல் தன் தகப்பனாருக்கு 100 கோடியில் நூலகம் அமைப்பது  84 கோடி பேனா அமைப்பது என மக்கள் வெறுப்பை திமுக சம்பாதித்து கொண்டுள்ளது. 

 

நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் ஆட்சி தான் இருந்தது அன்று. காந்திசெல்வன்  திமுகவின் இணை அமைச்சர் கையெழுத்து போட்டுள்ளார். எல்லாம் மறந்துவிட்டு பேசுகிறார்கள். இந்த நீட் தொடர்ந்து இருப்பதற்கு காரணமே காங்கிரஸ். ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்காடி இந்த நீட் வருவதற்கு காரணமாக இருந்தவர்” எனக் கூறினார்.

 

 

Next Story

'சி.ஏ.ஏ. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது' - நளினி சிதம்பரம்

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

சி.ஏ.ஏ. சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற மாட்டார்கள் என மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நிதியமைச்சரின் மனைவியுமான  நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

Nalini Chidambaram

 



சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,  இத்தகைய சட்டங்களைக் கொண்டு வருவதால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதிக்கப்படுகிறது என்றும் இதிலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் ஈடுப்பட்டனர். இதில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் வைகை, நளினி சிதம்பரம், என்.ஜி.ஆர். பிரசாத், கண்ணதாசன், சுதா ஆகியோர் கழுத்தில் பதாகைகளை ஏந்தி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் பின்னர் பேட்டியளித்த நளினி சிதம்பரம், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டமானது இந்துக்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு ஆதாரவாகவும் நடத்தப்படும் போராட்டம் அல்ல என்றார். பின்னர் சட்டங்கள்,  அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., சட்டங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், இத்தகைய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற மாட்டார்கள். அது தங்கள் கோரிக்கையும் இல்லை என தெரிவித்தார்.