நக்கீரன் ஆசிரியருக்கு எதிரான வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

high court chennai

நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் தொடர்பாக,ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு, பின்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நக்கீரன் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 35 நக்கீரன் ஊழியர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நக்கீரன் ஊழியர்கள் பொன்னுசாமி உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வழக்கில் தங்களுக்கும், கட்டுரைகள் வெளியானதிற்கும் எந்த தொடர்பு இல்லை எனவும், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வரும் 21ஆம் தேதி வரை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கோடு, இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். விசாரணை 29ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நக்கீரன் சார்பில் வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜரானார்கள்.

Chennai highcourt nakkheerangopal
இதையும் படியுங்கள்
Subscribe