Skip to main content

நக்கீரன் ஆசிரியரை எழும்பூர் நீதிமன்றம் விடுவித்தது சரியே! உயர்நீதிமன்றம் பாராட்டு!

Published on 07/01/2019 | Edited on 08/01/2019
nakkheeran gopal


 

நிர்மலா தேவி விவகாரம் குறித்த செய்திகளில் ஆளுநரை தொடர்புப்படுத்தி நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியிடுவதாகவும், அதனால் ஆளுநர் மனஉளைச்சல் ஏற்பட்டு பணி செய்ய முடியாமல் தவிப்பதாகவும் கூறி ஆளுநரின் செயலாளர், நக்கீரன் ஆசிரியர் மீது இந்திய தண்டனை சட்டம் 124ன் படி நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்திருந்தார்.
 

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் நக்கீரன் ஆசிரியர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்ற 13வது மாஜிஸ்திரெட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 
 

பத்திரிகைகளில் செய்தி வெளியிடும்போது பாதிக்கப்பட்டவர்கள், அவதூறு வழக்குகள் தொடரலாமே தவிர, 124வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்வது பத்திரிகைகளை அச்சுறுத்தும் மோசமான முன்னுதாரணமாகும். இது பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்புகளுக்கும், வழிமுறைகளுக்கும் எதிரானதாகவும் என்று கூறி நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதிட்டார். 
 

போலீசார் தாக்கல் செய்த ஆவணங்களை பார்வையிட்டு, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, எழும்பூர் நீதிமன்ற 13வது மாஜிஸ்திரேட், நக்கீரன் ஆசிரியரை இ.த.ச. 124ன்படி கைது செய்வதற்கு போதுமான ஆவணங்களோ, முகாந்திரமோ இல்லை என்றும் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் கூறி நக்கீரன் ஆசிரியரின் கைதை நிராகரித்து அவரை சிறைக்கு அனுப்பாமல் விடுவித்து உத்தரவிட்டார்.

 

high court chennai


 

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெற்று வந்தது. 
 

நமது தரப்பில் வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், பி.குமரேசன், எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அரசு தரப்பில் நக்கீரன் வழக்குகளுக்கான சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி வாதிட்டார்.
 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இன்று (07.01.2019), நக்கீரன் ஆசிரியர் வழக்கில் சென்னை எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உயர்நீதிமன்றம் தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும், சட்டத்தை கூர்ந்து பார்த்து அதன்படி உத்தரவு பிறப்பித்த 13வது மாஜிஸ்திரேட் பாராட்டுக்குரியவர் என்றும் சட்டத்தை அமல்படுத்தும் கீழமை நீதிமன்றங்களின் உத்தரவில் உயர்நீதிமன்றம் தேவையின்றி தலையிடுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என்றும் கூறி, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, வரும் காலங்களில் ஒரு நபரை கைது செய்யும்போது காவல்துறை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும், விதிமுறைகளையும் கூறி உத்தரவிட்டுள்ளார். 
 

இது பத்திரிகை சுதந்திரத்திற்கான தீர்ப்புகளில் மேலும் ஒரு மைல்கல் ஆகும். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.