Skip to main content

இலங்கைத் தமிழர் நலன் காக்கும் குழு உறுப்பினராக நக்கீரன் பொறுப்பாசிரியர் கோ.வி.லெனின் தேர்வு!

Published on 29/10/2021 | Edited on 30/10/2021

 

Nakkeeran Editor-in-Chief Govi. Lenin elected as a member of Sri Lanka Tamil Welfare Committee

 

 

தமிழ்த் திரைப்பட இயக்குனர் பாலா  தன்னுடைய ‘நந்தா’ திரைப்படத்தில், தமிழக திரும்பிய இலங்கைத் தமிழர்களை, மாவட்ட ஆட்சியர் ‘அகதிகள்’ என்று குறிப்பிடும் போது, இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் தாய்மண்ணைச் சேர்ந்த ராஜ்கிரண் அந்த மா.ஆட்சியரை இடையில் தடுத்து நிறுத்தி சொல்திருத்தம் செய்வார். இலங்கைத் தமிழர்களை ‘சொந்தத் தாயகம் திரும்பியவர்கள்’ என்று. 

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தாய்மண் திரும்பிய இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமும், அவர்கள் நலனில் உள்ள அக்கறை காரணமாக இலங்கைத் தமிழர் நலன் காக்கும் குழுவும் அமைத்துள்ளார்.

 

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் குழுவின் தலைவர் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், துணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி,  உறுப்பினர். செயலராக மறுவாழ்வுத்துறை இயக்குனரும் இருப்பார்.

 

 

Nakkeeran Editor-in-Chief Govi. Lenin elected as a member of Sri Lanka Tamil Welfare Committee

 

இலங்கைத் தமிழர் நலன் காக்கும் குழு உறுப்பினராக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசியும், பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் மறுவாழ்வு தேடுவோருக்கான ஐக்கிய நாடுகளின் தூதரக களப்பணி அலுவலகத் தலைவர், மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் கோவி.லெனின் அவர்களும், கல்வியாளர்கள் என்ற முறையில் முனைவர் கே.எம்.பாரிவேலன், முனைவர் ஈ.ரா.இளம்பரிதி, அரசமைப்புச் சட்ட வல்லுநர் என்ற முறையில் வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரமும், முகாமில் வாழும் இலங்கைத்தமிழர்களின் பிரதிநிதியாக தமயந்தி, முகாம்களில் சேவையாற்றிவரும் மூன்று தொண்டு நிறுவனங்கள் என மிகப் பெரிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

 

முதல்வர், இக்குழுவிற்கான பணியைத் தெளிவாக வரையறுத்திருக்கிறார். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அவர் அறிவித்தபடி தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கானத் திட்டங்களை செயல்படுத்துவதே இந்தக் குழுவின் பணி.

 

முகாம்களில் வசிக்கும் 18 ஆயிரத்து 937 இலங்கைத் தமிழர் குடும்பங்களும் முகாம்களுக்கு வெளியே வசிக்கும் 13 ஆயிரத்து 553 குடும்பங்களையும் பாதுகாத்து மேம்படுத்தி, அவர்களுக்கான சட்டரீதியான உரிமைகளைப் பெற்றுத் தருவதுதான் குழுவின் செயல் திட்டம்.

 

1. இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் வசிப்பிடம்-குடிநீர்-சாலை-மின்வசதி-மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்.

 

2. அவர்களுக்கான, கல்வி- வேலைவாய்ப்பு- திறன் வளர்ப்பு- அரசுத் திட்டங்கள் அடிப்படையிலான உதவிகள், சமூகப்பாதுகாப்பு ஆகியவற்றைப் பாலின பேதமின்றி உறுதி செய்தல்.

 

3. சட்டப்பூர்வ அங்கீகாரமின்றித் தாய்த் தமிழகத்தை நாடிவந்த இலங்கைத் தமிழர்களுக்கான நெருக்கடிகள், குடியுரிமைச் சிக்கல்கள், தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிப் போக விரும்புபவர்களுக்கான உதவிகள் உள்ளிட்ட சட்டரீதியான நீண்டகாலத் தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்துதல்.

 

இந்த மூன்று அம்சங்களையும் முதன்மையாகக் கொண்டு, அதற்கேற்ப சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தி, இலங்கையிலிருந்து தாய் மண் வந்த தமிழர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவதே இலங்கைத் தமிழர் நலன் காக்கும் குழுவினர் மேற்கொள்ள வேண்டிய பணி.

 

“இலங்கை அகதிகள் முகாம்” என்று இருந்ததை, “இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றம் செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். பெயரில் உருவாக்கிய மாற்றத்தை, செயலில் உருவாக்கும் பணியை வழங்கியிருக்கிறார் முதல்வர்.

 

  -  சுந்தர் சிவலிங்கம்

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.