Skip to main content

நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - பழநி  பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

Published on 09/10/2018 | Edited on 09/10/2018
ng


 நக்கீரன் ஆசிரியர்  கைது செய்யப்பட்டதை கண்டித்து பழநி  பத்திரிகையாளர்கள் சங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

’’தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை பழநி பத்திரிகையாளர்கள் சங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.


   தமிழகத்தில் சமீப காலமாக கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான போக்குகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் ஊடகங்கள் மற்றும்  பத்திரிக்கையாளர்களின் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளதை கண்டிக்கிறோம். மேலும்    தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் வார இதழின் உரிமையாளர் மற்றும் வெளியீட்டாளருமான  நக்கீரன் கோபால் அவர்கள் இன்று காலை சென்னையில் இருந்து புனே செல்ல இருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது  செய்யப்பட்டுள்ளார்.  
இவர் மீது தமிழக  ஆளுநரின் பணிகளில் தலையிடுவதாக ஆளுநர் மாளிகை சார்பில் புகார்  அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து. மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

இந்தச் செயலை பழநி  பத்திரிகையாளர்கள் சங்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.
சமூக அவலங்களையும், ஊழல்களையும், அரசும், ஆட்சியாளர்களும் மூடிமறைக்கும் பொழுது அதனை அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் மிக உன்னதமான பணியை செய்யும் பத்திரிக்கையாளர்களையும், ஊடகங்களையும்  நசுக்கும்  நோக்கில், அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, பொய்வழக்குகளில் கைது செய்வது உள்ளிட்ட செயல்கள் தொடருமேயானால், ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்று  பொருள். 


தமிழகம் மிக நெருக்கடியான சூழலில் சிக்கித் தவித்தபோதெல்லாம், அவற்றை தான் சார்ந்த ஊடகத்தின் மூலம் அழுத்தமாக பதிவு செய்து வந்தவர் நக்கீரன் கோபால், குறிப்பாக சந்தன  மரக்கடத்தல் வீரப்பன் விவகாரத்தில்  தமிழக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை  நடத்தி  அரசுக்கு பேருதவியாக  செயல்பட்டவர் இவர். இது மட்டுமல்லாமல் தமிழக ஊடகங்களின் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வழக்குகள் நடத்தி வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றியும் பெற்றவர். இப்படிப்பட்ட ஒருவரை,   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் மற்றும் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக  நடந்தவை நடந்தவையாக நக்கீரன் வார இதழ்களில் பதிவு  செய்துவரும்  நிலையில், அதற்கு மாற்று கருத்து இருக்குமேயானால் சட்டத்தின் மூலம் எதிர்கொள்ளாமல் நக்கீரன் கோபால் அவர்களை  பொய் வழக்கில் கைது செய்வது, நடந்த உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் (All are equal before the eyes of law) என்ற போதிலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட சிலர் சுதந்திரமாக போதுமேடைகளில் தோன்றும் நிலையில் சிலர் மட்டும் ரகசியமாக கைது செய்யப்படுவது சட்டத்தின் ஆட்சி (RULE OF LAW) தான் நடக்கிறதா என்ற ஐயத்தினையும் அச்சத்தினையும் ஏற்படுத்துகிறது.

 

 எனவே தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்  நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்குகளையும், கைது நடவடிக்கைகளையும் வாபஸ்  வாங்க வேண்டும் என்றும், நக்கீரன் கோபால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பழநி  பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.’’

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பஞ்சாமிர்தத்தில் அரசியல்' - குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கோவில் நிர்வாகம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 'Politics in Panjamirtham'-Temple administration responds to allegation

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தத்தை கோவில் நிர்வாகம் விற்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயிலில் தொடர்ந்து சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கோவிலைச் சுற்றியுள்ள சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகற்றப்பட்டதால் போராட்டம், நீதிமன்ற வழக்குகள் என அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலாவதியான பஞ்சாமிர்தம், கோவில் நிர்வாகத்தாலே விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் கோவில் மலை மீதுள்ள விற்பனை நிலையங்களில் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான லாரியில் 30க்கும் மேற்பட்ட  கேன்களில் அடைத்து வைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை பார்த்த ஒரு தரப்பினர் லாரியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்படுகிறதா? அல்லது வேறு இடங்களுக்கு பஞ்சாமிர்தம் கடத்தப்படுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். உடனடியாக அங்கு வந்த அடிவாரம் காவல் நிலைய போலீசார், லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், 'விழாக் காலங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அதிகப்படியான பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் மீதமான காலாவதியான பஞ்சாமிர்தங்களை பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கக் கூடாது என்பதால் பெரிய கேன்களில் நிரப்பி அதை கோசாலைகளுக்கு எடுத்துச் சென்று அழிப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற சிலர், குறிப்பாக ஆக்கிரமிப்பு காரணத்தால் அகற்றப்பட்டவர்கள் கோவில் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

“பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வோம்” - மிரட்டலால் கதறும் குடும்பம்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
 owner who imprisoned and tortured family members who came to work in Palani

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ளது மேலச்சேரி. இந்தப் பகுதியில் உள்ள மதுரா இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கு 26 வயதாகிறது. இவரது மனைவி ரேணுகா. இவருக்கு 20 வயது ஆகிறது. செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் இந்தத் தம்பதிகள், வெளியூருக்குச் சென்று செங்கல் தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, பார்த்திபன், ரேணுகா, ரேணுகாவின் தந்தை நாகப்பன் இவர்களுடன் அவரது உறவினரான சித்தி, சித்தப்பா மேலும் ஒருவர் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்டோர் செங்கல் தயாரிக்கும் பணிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, இந்த 6 பேரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான சேம்பரில் வேலையில் சேர்ந்துள்ளனர். இந்தச் சேம்பரில் நாள் ஒன்றுக்கு கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து 800 ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதற்கு தம்பதியரும் சம்மதம் தெரிவித்து வேலை செய்து வந்துள்ளனர். 

இப்படியே கடந்த ஐந்து மாதங்களாக 6 பேரும் கடுமையாக வேலை செய்துள்ளனர். இந்நிலையில், செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த ரேணுகாவின் சித்தப்பா மற்றும் சித்தி இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஊருக்கு சென்று உடம்பை கவனித்து விட்டு வருவதாக கூறிவிட்டு ஊருக்கு சென்றுள்ளனர். ஊருக்குச் சென்றவர்கள் ஒரு வார காலமாகியும் செங்கல்சூளை வேலைக்கு திரும்ப வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த செங்கல் சூளை உரிமையாளர், பார்த்திபன் மற்றும் அவரது மனைவி ரேணுகா இருவரையும் அழைத்து, ஊருக்கு சென்ற உங்களின் உறவினர்கள் உடனடியாக வரவேண்டும். இல்லை என்றால், உங்களை உண்டு இல்லையின்னுனு பண்ணிடுவோம் என மிரட்டியுள்ளார். ஆனால், அவர்கள் இவ்வாறு கூறிய மறுதினமும் ஊருக்கு சென்றவர்கள் வரவில்லை. இதனால், மேலும் ஆத்திரமடைந்த செங்கல் சூளை உரிமையாளர், மறுபடியும் ரேணுகாவை அழைத்து, உடனே உங்களின் சித்தப்பா, சித்தி வேலைக்கு வரவில்லை என்றால் உங்களை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வோம் என்று கூறி மிரட்டியுள்ளார்.

மிரட்டியதோடு இல்லாமல், அவர்களுடன் வேலை பார்க்கும் அஜித் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் ஏவி விட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ரேணுகா முகம் முழுவதும் வீக்கத்தோடும், கண் திறக்கமுடியாத அளவுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது கணவரான பார்த்திபனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அங்கிருந்து தப்பித்து மருத்துவமனைக்கு சென்ற தம்பதிகள், போகும் வழியில் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற தங்களை, உறவினர்கள் ஊருக்கு சென்று விட்டார்கள் எனக் காரணம் காட்டி கொடூர தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அழுதுகொண்டே வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியிருக்கிறது. அப்போது, இந்த வீடியோவைப் பார்த்த  கொத்தடிமைகள் மீட்பு குழுவைச் சேர்ந்த கோவிந்தராஜ் அவர்களுக்கு தொடர்பு கொண்டுள்ளார். பின்னர், அவர்களை முதலில் அங்கிருந்து மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 

இதற்கிடையில் இந்தத் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற செங்கல் உரிமையாளர், மறுபடியும் தம்பதியரை விரைவில் வேலைக்கு வரவேண்டும் எனக்கூறி மிரட்டியிருக்கிறார். இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் பலத்த காயத்தோடு சிகிச்சைப் பெற்று வரும் ரேணுகாவிடம் கேட்ட போது, நடந்த அனைத்தையும் விபரமாக கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நான் இந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் போதும், அரசு மருத்துவ மனைக்கு வந்த உரிமையாளர், விரைவில் பணிக்கு வரவில்லை என்றால் பண்ணை வீட்டில் வைத்து மீண்டும் சித்திரவதை செய்வோம் என்று தைரியமாக மிரட்டிச் சென்றதாக கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். இது குறித்து சாமிநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.