
தமிழக அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அரசுப் பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் (TNPCB - Tamil Nadu Pollution Control Board) தேர்வுகளுக்கு திறமையான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றும் இளைஞர்களுக்கு அனுபவம் இல்லை என்றும் கூறி அவர்களுக்கு பதிலாக ஓய்வூதியம் பெற்றவர்களை மறுசுழற்சி செய்து பணியமர்த்தியிருப்போது கண்டனத்திற்குரியது.
மேலும், இந்த முடிவை நியாயப்படுத்தும் விதமாக, ஓய்வு பெற்றவர்கள் தலைமைச் செயலகத்தால் பரிந்துரைக்கப்பட்டனர் என்றும் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. முதல்வரின் வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் பொழுது, ஓய்வு பெற்றவர்களை மறுசுழற்சி செய்து மீண்டும் அரசுப் பணிகளில் பணியமர்த்துவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை தருவோம் என்பது போன்ற பல அடுக்கடுக்கான பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த திமுகஅரசு, இன்னும் அவற்றை நிறைவேற்றவில்லை.
அதுமட்டுமின்றி, இதுபோன்ற நியமனங்கள் இடஒதுக்கீடு விதிமுறைகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நடைமுறைகளை மீறுவதாகவும் உள்ளது. எனவே, இதுபோன்ற பணியமர்த்தும் நடவடிக்கைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு நிறுத்த வேண்டும் எனவும் தகுதி படைத்த பட்டதாரி இளைஞர்களை அத்தகைய பணிகளில் அமர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.