Skip to main content

துப்பாக்கி தயாரித்த வாலிபர்களிடம் என்.ஏ.ஐ போலீசார் விசாரணை; 7 நாள் 'கஸ்டடி' வழங்கி உத்தரவு

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 

NAI police investigate the youth ! 7 day 'custody'

 

சேலத்தில், யூடியூப் சேனல்களைப் பார்த்து துப்பாக்கிகளை தயாரித்த வழக்கில் கைதான வாலிபர்களை 7 நாள்கள் காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமைப் பிரிவு (என்.ஐ.ஏ) காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா மற்றும் காவல்துறையினர் கடந்த மே 20ம் தேதி, புளியம்பட்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனை செய்தபோது, அதில் ஒரு கைத்துப்பாக்கி, பாதி செய்து முடிக்கப்பட்ட நிலையில் இருந்த பெரிய துப்பாக்கி, ஒரு லிட்டர் பெட்ரோல், லைட்டர் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. 

 

அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், உடனடியாக அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி (24) மற்றும் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. செட்டிச்சாவடி பகுதியில், அவர்கள் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து துப்பாக்கி செய்தவதற்காக இரும்பு உருளைகள், வெல்டிங் இயந்திரம், வாக்கிடாக்கி, அரிவாள், கையுறைகள், முகமூடிகள் மற்றும் லேத் பட்டறையில் பயன்படுத்தப்படும் எல்லா விதமான உபகரணங்களையும் கைப்பற்றினர். 

 

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சேலம் அழகாபுரம் புதூரைச் சேர்ந்த அவர்களுடைய நண்பன் கபிலன் (25) என்பவரையும் கைது செய்தனர். இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை தடுக்கவும், பறவைகளை பாதுகாக்கவும் ஆயுதம் ஏந்திப் போராட ஒரு தனி இயக்கத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. யூடியூப் சேனல்களைப் பார்த்து துப்பாக்கி செய்ய கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளனர். பிடிபட்ட மூவர் மீதும் ஆயுதத்தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

உள்ளூர் காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு பின்னர் கியூ பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்தப் பிரிவு காவல்துறையினர் அவர்களை காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், புதிய தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், அவர்களின் பின்னணியில் வேறு இயக்கங்களோ, நபர்களோ இல்லை என்பதும் தெரியவந்தது. 

 

இந்நிலையில், கபிலன் மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, இந்த வழக்கு பின்னர் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பிடிபட்டவர்களில் நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகிய இருவரையும் 7 நாள்கள் காவலில் எடுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவர்களிடம் ஆக. 23ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். 


ஆரம்பத்தில் சென்னையில் வைத்து விசாரித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவர்களை சேலத்திற்கு அழைத்து வந்து, அவர்கள் துப்பாக்கி தயாரிப்பதற்காக எடுத்திருந்த வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். துப்பாக்கிகளை தயாரித்தது எப்படி என்று செய்து காட்டச் சொல்லி, காணொளி காட்சியாக பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர். மேலும், பிணையில் விடுதலை ஆன கபிலனிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.