உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 464 வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்புற விழா தொடங்கியது.
உலக புகழ்பெற்ற இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளங்களுள் நாகூர் தர்காவும் ஒன்று, நாகூர் தர்காவின் கந்தூரி விழா வருடா வருடம் பல லட்சம் மக்கள் கலந்துகொண்டு, வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
14 நாட்கள் நடைபெறும் இந்த விழா தொடர் மழையால் விமரிசையாக இருக்காது என பலதரப்பட்ட மக்களும் பேசிவந்த நிலையில், அந்த எண்ணங்களை தகற்த்தெறியும் விதமாக மக்கள் அலை அலையாக கூடி 464 வது கந்தூரி விழா கொடியேற்றத்தை கோலாகலமாக துவக்கிவைத்தனர்.
நாகை மீரா பள்ளியில் இருந்து வழக்கமாக 50 க்கும் மேற்பட்ட கப்பல் ஊர்வலங்கள் வருவது வழக்கம், இந்த ஆண்டு கரோனா காரணமாக மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் உள்ளிட்ட மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட எட்டு கப்பல்களில் மட்டுமே கொடி ஊர்வலம் நடைபெற்றது.
நாகை நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த கொடி ஊர்வலம், நேற்று இரவு நாகூர் தர்காவின் அலங்கார வாசல் வந்தடைந்து. பின்னர் புனித கொடிகள் பாத்தியா ஒதப்பட்டு தர்காவின் 5 மினராக்களிலும் ஏற்றப்பட்டு கந்தூரி விழா தொடங்கியது.
அப்போது வண்ண விளக்குகளால் மினராக்கள் ஜொலிக்க விண்ணதிர போடப்பட்ட வாணவேடிக்கைகளை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இந்த கடினமான சூழலிலும் கந்தூரி விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கந்தூரி விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் வரும் 23 ம் தேதியும், பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி 24 ம் தேதி அதிகாலையும் நடைபெற இருக்கிறது.