Skip to main content

பழனிசாமியை சந்தித்த நாகூர் தர்கா நிர்வாகிகள் அதிரடி நீக்கம்...

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

Nagore Dargah executives who met Palanichamy were dismissed

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சட்டமன்றத் தேர்தலுக்கு ஆதரவு அளித்த இஸ்லாமிய அமைப்பினருக்கு நாகூர் சாஹிப் மார்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வரை சந்தித்தவர்களைப் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் முன்னாள் தலைவர் காமில் சாஹிப், அவரது மகன் செய்யது முகமது கலீபா சாஹிப், ஹாஜ் வாப்பா ஆகிய மூன்று பேர் நாகூர் தர்கா சாஹிப்மார்கள் சங்கம் சார்பில் நேற்று (09.03.2021) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். சாஹிப்மார்கள் சங்கத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு, நாகூரில் உள்ள சாஹிப்மார்களிடையே பெரும் கோபம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இதையடுத்து இன்று நாகூரில் அவசர அவசரமாக கூடிய நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் சங்கம், நாகூர் தர்கா சாஹிப்மார்கள் முன்னேற்ற சங்கம், தமிழக தர்காக்கள் பேரவைகள் என அனைத்து அமைப்புகளின் சார்பிலும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தன்னிச்சையாக முடிவெடுத்து அதிமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்த நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப்பை அந்த பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். அதோடு அதிமுகவிற்கு ஆதரவு அளித்த நாகூர் தர்கா முன்னாள் நிர்வாகிகள் மூன்று பேருக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

 

Nagore Dargah executives who met Palanichamy were dismissed

 

இதைப் பற்றி தர்கா சாஹிப்மார்கள் கூறுகையில், “அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பதால், இஸ்லாமிய மக்களின் ஆதரவு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டுமே. தன்னிச்சையாக காசுக்காக ஒருசிலர் நாகூர் தர்காவின் நிர்வாகமே தங்களிடம்தான் இருக்கிறது போல் எண்ணி பேசி இருக்கின்றனர். மேலும் இஸ்லாமியர்களின் வாக்குகள் அவர்கள் வசமே இருப்பதுபோல ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்கு அதிமுகவிற்கு ஆதரவு அளித்திருப்பது அட்டக்கத்தியை நம்பி போர்க்களத்தில் குதிப்பதற்கு சமமானது. எங்களது வாக்கு பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு கிடையாது” என்று உறுதிபட கூறுகின்றனர். 

 

இதுகுறித்து நாகை அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம், “சில மாதங்களுக்கு முன்பு நாகை வந்திருந்த எடப்பாடி பழனிசாமியை நாகூர் தர்காவிற்கு சொந்தமான குளத்தின் கரை இடிந்திருந்ததைப் பார்வையிட அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் முயற்சியால் அழைத்துவந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு நாகூரில் சிறப்பான வரவேற்பு வழங்கி கவுரவித்தனர். இடிபாடுகளைப் பார்வையிட்டவர், உடனடியாக செய்து தருவதாக கூறிவிட்டு சென்றார். அப்போது அறிமுகமானதை சாதகமாக்கிக்கொண்ட அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தர்காவின் முன்னாள் பொறுப்பாளர்களை அழைத்துச்சென்று, பரஸ்பரம் ஏற்படுத்திக்கொண்டு பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் சந்திக்க செய்து இஸ்லாமியர்களின் ஆதரவு எங்களுக்கும் இருக்கிறது என்பதை வெகுஜனமக்களுக்கு சொல்லும்விதமாக செய்துள்ளனர். அதிமுக, பாஜகவோடு கூட்டணி வைத்த நொடிமுதலே இஸ்லாமியர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது முடிவாகிவிட்டது. இதுபோன்ற நாடகம் நடத்துவதனால் எதுவும் அதிமுகவிற்கு சாதகமாகிவிடாது” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.