Skip to main content

‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ - 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியரிடம் அடி வாங்கிய மாணவர்கள்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

nagapattinam vedaranyam boys government school students reunion

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1985 - 1987 ஆம் ஆண்டுகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படித்த மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியில் மீண்டும் ஒருவர் ஒருவரை சந்தித்துக் கொள்ள முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதன்படி 36 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முன்தினம் தங்கள் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்டனர்.

 

இவர்களுக்கு தற்போது 60 வயது ஆகிறது. மேலும் இவர்களில் பலர் ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் மற்றும் காவல்துறை எனப் பல்வேறு பதவிகளில் பணியாற்றி தற்போது  ஓய்வு பெற்றிருக்கின்றனர். இன்னும் சிலர் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். இந்த சந்திப்பின்போது தங்களுக்கு கற்பித்த 8 ஆசிரியர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தனர்.

 

இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து, ஆசிரியரை பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களும் பாடம் நடத்தினர்.  அப்போது ஆசிரியர் கையில் குச்சியைக் கொடுத்து நாங்கள் மாணவர்களாக இருந்தபோது அடித்ததைப் போலவே மீண்டும் எங்களை அடிங்க சார் என கையை நீட்டி ஒவ்வொருவராக ஆசிரியரிடம் அடி வாங்கி மகிழ்ந்தனர். அதன் பின்னர் முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் தங்களது பள்ளிக் கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

 

இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்களின் மகன்கள், மகள்கள், பேரன் மற்றும் பேத்திகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்  இறுதியில் தங்களது ஆசிரியர்களை காரில் அழைத்துச் சென்று அவர்களது வீட்டில் விட்டுவிட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி பிரியா விடை கொடுத்துச் சென்றனர். முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களைப் பள்ளிக்கு அழைத்து சந்தித்து மரியாதை செய்த இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.