Skip to main content

பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த முதியவர்!!! அடக்கம் செய்ய வழியின்றி தவித்த மனைவி.. உதவிக்கு வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

Nagapattinam incident - ADMK MLA help

 

நாகபட்டினம் மாவட்டம் வேளாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் முருகன் (78). அவரது மனைவி அஞ்சம்மாள். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்து பிழைத்தவர்கள் வயது முதிர்வால் கூலி வேலையும் செய்ய முடியாத நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்ட விநாயகர் ஆலயத்தில் வந்து தஞ்சமடைந்தனர்.


பிரசித்தி பெற்ற நீலகண்ட விநாயகர் ஆலயத்திற்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதைப் பார்த்த முதிய தம்பதி அவர்கள் கொடுக்கும் காசு, உணவுகளை பெற்று கடந்த மூன்று ஆண்டுகளாக கோயில் வளாகத்தில் தங்கிவிட்டனர். தினமும் அரசு அன்னதானத்தில் சாப்பாடு, கோயிலில் தங்குவது, செலவுக்கு பக்தர்களிடம் வாங்குவதுமாக அவர்களின் வாழ்க்கை ஓடியது.

இதற்கிடையில்தான் கரோனா வைரஸ் பரவலை தடுக்க கோயில்களில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்ட நிலையில் அன்னதானமும் நிறுத்தப்பட்டது. அதனால் அங்கு தங்கி இருந்த ஆதரவற்ற பலரும் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் தஞ்சமடைந்தனர். அப்படித்தான் முருகனும், அஞ்சம்மாளும் தஞ்சமடைந்தனர். சில நாட்கள் உணவுக்காக தவித்தவர்களுக்கு பேராவூரணி தன்னார்வலர்கள் உணவு கொடுத்து வந்தவர்.

இந்த நிலையில் இன்று காலை பேருந்து நிலையம் அருகில் உள்ள கழிவறைக்குச் சென்ற முருகன் வெளியே வரவில்லை. நீண்ட நேரமாக வெளியே வராததால் அஞ்சம்மாள் உள்ளே சென்று பார்த்தபோது முருகன் கீழே விழுந்து பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். தொட்டுப் பார்த்தால் இறந்து கிடப்பது தெரிந்தது. தனி ஆளாக பேருந்து நிலையத்தில் அவர்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து தூக்கி வந்து, ஒரு போர்வையால் போர்த்தி வைத்துவிட்டு ஒரு மாலை வாங்கி போடக்கூட வழியில்லாமல் கணவரை எங்கே அடக்கம் செய்வது? எப்படி அடக்கம் செய்வது என்று கண்ணீரோடு தனியாக நின்று கொண்டிருந்தார்.

இந்த தகவல் வேகமாக பரவிய நிலையில் அங்கு வந்த பேராவூரணி (அ.தி.மு.க) எம்.எல்.ஏ கோவிந்தராசு முருகன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, புதிய வேட்டியை போர்த்திவிட்டு அருகில் நின்று கொண்டிருந்த அஞ்சம்மாளிடம் உதவிக்கு பணம் கொடுத்துவிட்டு உடனே பேரூராட்சி, வருவாய் துறை அதிகாரிகளை அழைத்து முருகன் உடலை அடக்கம் செய்ய கேட்டுக் கொண்டார். அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்த பிறகு அங்கிருந்து சென்றார். தொடர்ந்து முருகன் உடல் பேராவூரணி இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆதரவற்ற நிலையில் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த முதியவருக்கு தக்க நேரத்தில் அடக்கம் செய்ய உதவிய எம்.எல்.ஏ வை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள். இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.