ADVERTISEMENT

’உணவில்லாமல் மீனைமட்டும் சாப்பிட முடியாது’-வெள்ளபள்ளத்தில்  கமல்ஹாசன் பேச்சு

12:48 AM Feb 23, 2019 | selvakumar

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்திற்கு, புயலடித்த சமயத்தில் வந்து பார்வையிட்டு சென்றார் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்.

ADVERTISEMENT

அப்போது அங்குள்ள மீனவர்களுக்கு மீன்பிடி வலை வழங்குவதாக உத்தரவாதம் கொடுத்து விட்டு சென்றார். அதன்படி 21 ம் தேதி கட்சி துவங்கி ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு துவக்கத்தில் நிவாரண உதவியாக தான் கொடுத்த வாக்குறுதி படி 159 மீனவர்களுக்கு வலைகள் வழங்க வந்திருந்தார்.

வெள்ளப்பள்ளம் கடற்கரை ஓரத்தில் பிரமாண்டமாக மேடை அமைத்திருந்தனர் மக்கள் நீதி மய்யத்தினர். இயற்கை சூழலோடு கடற்கரைக் காற்றில் அமைக்கப்பட்டிருந்த அந்த நிவாரணம் வழங்கும் விழாவிற்கு கமல்ஹாசன் வருவதற்கு முன்பு நடிகை ஸ்ரீப்ரியா கூட்டத்தை நெறிப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார்.

" கஜா புயலின் பாதிப்புகள் குறித்தும், அரசின் அலட்சியப்போக்கு குறித்தும், மக்கள் படும் இன்னல்கள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கிராம சபைக்கூட்டம் குறித்தும், மக்கள் நீதி மையம் செய்யப்போகும் செயல் திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார். பிறகு கமல்ஹாசன் வந்ததும் அவர் மேடையிலிருந்து இறங்கி திருவாரூரில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றுவிட்டார்.

கமல்ஹாசன் வருவதற்கு என்று தனியாக கடற்கரையில் செம்மண்ணால் சாலைகள் அமைத்திருந்தனர், கமல் வருகையின் போது சிறுவர்கள் முன்டியடித்து ஓடினர்.

விழாவில் பேசிய கமல்ஹாசன், "நாகப்பட்டினத்தில் உள்ள மீனவர்கள் மட்டும் உறவினர் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் எனக்கு உறவினர். குறிப்பாக வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வலுவான உறவினர்கள். நான் கடல் மீன்கள் படத்தின்போது வலை விரித்து மீன் பிடிப்பது எப்படி என்பதை நன்கு அறிந்தவன். எனக்கு மீன்பிடித் தொழிலில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தெரியும். நான் மீனவர்களின் சீடன். சினிமாவிற்காக மட்டுமல்ல தங்கியிருந்த அனைத்து நாட்களிலும் நானே வலை விரித்து மீன்பிடித்து அவர்களது கஷ்டங்களை அறிந்துக் பார்த்தவன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை, மரங்கள் அகற்றப்படவில்லை, பிரிந்துபோன கூரைகள் அமைக்கப்படவில்லை, வரும் வழியில் மரங்கள் வெட்டி அகற்றப்படாமல் கிடந்ததை பார்த்து கலங்கியபடியே வந்தேன். கட்டிடங்கள் சேதம் அடைந்த நிலையில் பிரிக்கப்பட்ட காக்கா கூடுகளை போல் கிடக்கிறது. அரசு என்ன செய்தது, செய்துகொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஓரு செய்தியை கேள்விப்பட்டேன் அது உண்மையாக இருக்கக் கூடாது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத்தில் பாதியை சுருட்டி விட்டார்கள் என கேள்விப்பட்டேன். இதில் கூடவா அவர்கள் ஊழல் செய்ய வேண்டும்.

வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கு கட்சி சார்பில் நாங்கள் கொடுப்பது கொடையோ,தர்மமோ அல்ல, பட்டகடன் ஆகும். மக்கள் நீதி மையம் சார்பில் கொடுக்கப்படும் பொருட்களும், நிவாரண உதவிகளும் ,நலத்திட்ட உதவிகளும், நேர்மையான முறையில் சம்பாதித்து முழுமையாக வரி செலுத்தி வெள்ளை பணத்தில் வாங்கியது. கருப்பு பணத்தில் வாங்கியது அல்ல.

பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை என்னால் முடிந்த அளவு மேற்கொள்வேன் தேர்தலுக்காக கூறப்படும் செய்தி அல்ல மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவோம்". என்றார்.

கமல்ஹாசன் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்திற்கு வரும்போது அவரது காரை மறித்த விவசாயிகள், விவசாய பெண்கள் "கமல்ஹாசன் மீனவர்களை மட்டும் தான் சந்திப்பாரா, விவசாயிகளை சந்திக்க மாட்டார், இந்த நாட்டில் விவசாயிகள் அனாதைகளாக மீனவர்கள் மட்டும்தான் இந்த நாட்டின் குடிமக்களா என ஆக்ரோசமாக கேள்வியை முன்வைத்து கேட்டனர்.

அதற்கு விழா மேடையில் பதிலளித்துப் பேசிய கமல்ஹாசன்" விவசாயிகளை நான் சந்திக்கவில்லை என கூறியிருக்கிறார்கள். அவர்களும் என்னுடைய உறவுகள்தான் உணவில்லாமல் மீனை மட்டும் சாப்பிட முடியாது, சாப்பிட்டு உயிர்வாழ முடியாது." என்று பதில் கூறிப்பேசி முடித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கமல்ஹாசனின் வருகை வேதாரண்யம் தொகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT