Skip to main content

நிறுத்தப்பட்ட பணிகளைத் துவங்கும் ஓ.என்.ஜி.சி... எதிர்ப்புத் தெரிவிக்கும் பொதுமக்கள்!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

NAGAI DISTRICT ONGC ISSUES FARMERS

 

நாகை அருகே உள்ள ஓ.என்.ஜி.சி ப்ளாண்டில் ஏற்கனவே பணிகள் நிறுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுமானப் பொருட்களை இறக்கி ரகசியமாக பணிகளைத் தொடங்கியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குருவாடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. என்கிற பொதுத்துறை நிறுவனம் கடந்த 2010- ஆம் ஆண்டு பூமியில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்துளை கிணறுகளை அமைத்தது. அதனை பொதுமக்கள் கடுமையாக எதிர்த்ததால் 2012- ஆம் ஆண்டு மூடினர். பிறகு கிடப்பில் போடப்பட்ட பணிகளை மீண்டும் துவங்க இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, கடந்த 2017- ஆம் ஆண்டு குருவாடி, அண்ணா மண்டபம், திருச்செங்காட்டங்குடி உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகினர். 

 

NAGAI DISTRICT ONGC ISSUES FARMERS

 

அதன்பிறகு, கடந்த 2014- ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்திற்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை முடிவில் ஹைட்ரோகார்பனோ, எண்ணெய் எரிவாயுவோ, மீத்தேனோ என எந்தப் பணிகளும் குருவாடி கிராமத்தில் நடைபெறாது, என ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக விவசாயிகளிடம் உறுதி அளித்தது. 

 

இந்தச் சூழ்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கரோனா ஊரடங்கு உத்தரவை பயன்படுத்திக்கொண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் குருவாடி கிராமத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் ரிக் அமைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அந்த இடத்தில் இருந்த கருவேல மரங்களை அகற்றி, கருங்கல், மண், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை இறக்கி, பில்லர் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

 

NAGAI DISTRICT ONGC ISSUES FARMERS

 

பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக ஓ.என்.ஜி.சி.நிர்வாகம் கூறியுள்ள நிலையில் திடீரென கட்டுமானப் பொருட்கள் இறங்குவதற்கான காரணம் என்ன? கான்கிரீட் வேலைகள் நடைபெற்று இருப்பதற்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட கேள்விகளை அப்பகுதி விவசாயிகள் எழுப்பியுள்ளனர். மேலும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், ஆபத்தான பணிகளை ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் நிறுத்த வேண்டும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்கிறார்கள் விவசாயிகள்.

 

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளோ, "குருவாடி கிராமத்தில் போடப்பட்டிருக்கும். ஆழ்துளை கிணற்றில் எந்தவிதமான எரிவாயுவும் கிடைக்கவில்லை. அந்தப் பகுதியில் போடப்பட்டிருக்கும் எரிவாயு எடுப்பதற்கான இயந்திரங்களை அகற்றப்படுவதற்கான வேலைகள் மட்டுமே நடைபெறுகிறது." என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார். 

Next Story

போராட்டத்திற்கு தேதி குறித்த விவசாயிகள்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
 Farmers on the date for the struggle 

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட 12 அம்ச வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்றபோது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து தடுக்கப்பட்டனர்.

இந்த தடுப்புக்கட்டைகளைத் தகர்த்தெரிந்த விவசாயிகள் தடைகளை மீறி டெல்லி நோக்கி புறப்பட்டபோது விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். மேலும் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு பட்டுத் தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயி ஒருவரும் போராட்டக் களத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. அதே சமயம் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாயிகள் விரிவான ஆலோசனை செய்து வந்தனர்.

இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், “டெல்லிக்கு பேரணியாக செல்லும் எங்கள் (விவசாயிகள்) திட்டம் அப்படியே உள்ளது. அதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. எல்லையில் பலத்தை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 6 ஆம் தேதி விவசாயிகள் நாடு முழுவதிலும் இருந்து ரயில், பேருந்து, விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு போராட்டத்தில் கலந்துகொள்ள அரசு அனுமதிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம். அன்றைய தினம் நன்பகல் 12 மணி முதல் மாலை முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.