Skip to main content

எமெர்ஜென்சி வார்டில் இருந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு! - நோயாளிகள் சிதறி ஓட்டம்!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

 


தேர்தல் விரோதம் காரணமாக இரு கோஷ்டியினர் மோதிக்கொண்டதில், 5 பேர் அரிவாள் வெட்டுக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாளால் வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

நாகப்பட்டினம் ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 100- க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். நேற்று (06/04/2021) நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது இரு கட்சி இளைஞர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தி இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். நேற்று ஏற்பட்ட விரோதம் பகையாக மூண்டு இன்று அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சியினரிடையே மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

 

நாகை ஏழைப்பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்ற இந்த கோஷ்டி மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களும் கத்தி அரிவாளுடன் மோதிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த மாரியப்பன், நகுலன், குகன், நித்தியானந்தம், நாகேந்திரன் ஆகிய இளைஞர்களுக்கு தலை, கை, காது, உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. இதையடுத்து, அவர்கள் 5 பேரும் நாகை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

காயமடைந்தவர்களைப் பார்க்க வந்த உறவினர்களை மற்றொரு தரப்பினர் நாகை அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு உள்ளே புகுந்து அரிவாளால் வெட்டினர். அப்போது அங்கிருந்த நோயாளிகளும், பொதுமக்களும் அலறி அடித்து நாலாபுறமும் அச்சத்தில் சிதறி ஓடினர்.

 

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த பொதுமக்கள் செல்ஃபோனில் பதிவு செய்தனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை அரசு மருத்துவமனை மற்றும் ஆரியநாட்டுத்தெரு, மகாலட்சுமிநகர் ஆகிய கிராமங்களில் அதிரடிப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

பொதுமக்கள் மத்தியில் அரிவாளால் வெட்டி மோதிக் கொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக இருக்கும், ஆரியநாட்டுத்தெரு மற்றும் மகாலட்சுமிநகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தேடி வருகின்றனர் காவல்துறையினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.