இதனையடுத்து, இந்த யூடியூப் சேனலைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி இந்த நிறுவனத்திற்கு எதிராக பா.ம.க நிர்வாகி ஒருவர் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 28 ஆம் தேதி (28-01-24) இந்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களையும், கோவை புறவழிச் சாலையில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கூடுமாறு உரிமையாளர் சக்தி ஆனந்தன் குறுஞ்செய்தி மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் பேரில், கடந்த 29 ஆம் தேதி (29-01-24) அந்த பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு குவிந்தனர். அப்போது அவர்கள், இந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு தவறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவும் கூறினர். மேலும் அவர்கள், இந்த நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாகவும், இதன் மூலம் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் அந்த பகுதிக்கு வந்து, நிறுவனத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுப்பினர்களிடம் உறுதி அளித்தார். அந்த உறுதியின் அடிப்படையில், அங்கிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அதே சமயம் இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கோவையில் திரண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எனப் பலருக்கும் இடையூறு ஏற்பட்டது. இது தொடர்பாக எம்.எல்.எம் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது கோவை சிங்காநல்லூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தனது நிறுவனம் குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சக்தி ஆனந்தன் தனது ஆதரவாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவகத்திற்கு வந்திருந்தனர்.