Mystery in Kallakurichi student's Incident... Vijayakanth condemns!

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் போலீசார் மெத்தனம் காட்டுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த17 வயது சிறுமி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி, அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை அவர் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்று அவரது பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகத்தில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும் பதறிதுடித்தபடி பள்ளிக்கு விரைந்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், பள்ளிக்குச் சென்று மாணவியின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் மாணவி, மூன்றாவது மாடியில் இருந்து தானே கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகின்றனர். பெற்றோர் தரப்பில் மாணவி தற்கொலையில் ஈடுபட்டிருக்க மாட்டார் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். மாணவியின் உறவினர்கள் பள்ளியின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் அறிந்து பள்ளிக்கு வந்த போலீசார் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவியின் மரணம் குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு மாணவியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Advertisment

இந்நிலையில் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி இறந்த வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதாகவும், இந்த மரணம் பற்றி போலீசார் உரிய விசாரணை நடத்தாதது கண்டனத்திற்குரியது. அதே பள்ளியில் ஏற்கனவே 5 மாணவர்கள் இறந்ததாகக் கூறப்படும் நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.