Skip to main content

மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள்; கருப்பு டீ ஷர்ட்டில் வந்த மர்ம நபர் - நள்ளிரவில் அரங்கேறிய பகீர் சம்பவம்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

mysterious person who stole the grazing cattle

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிதுரை. இவர் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடு, மாடுகளை வளர்க்கும் விவசாய தொழிலை செய்து வருகிறார். மேலும், அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறார். இதே வேளையில், இசக்கிதுரை வீட்டிலிருந்து மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மூன்று நான்கு நாட்கள் கழித்து தான் வீட்டிற்குத் திரும்பும் என்பது வழக்கம்.

 

அந்த வகையில், கடந்த 30 ஆம் தேதியன்று இசக்கிதுரையின் ஆடு, மாடுகள் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. அதன்பிறகு, இசக்கிதுரையும் தன்னுடைய மற்ற வேலைகளைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில், மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த இசக்கிதுரை மேலும் ஒருநாள் காத்திருக்கிறார். ஆனால், நான்கு நாட்கள் ஆகியும் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு மாடுகள் வீடு திரும்பவில்லை.

 

இதையடுத்து, தன்னுடைய கால்நடைகளைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில், பதறிப்போன இசக்கிதுரை இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை எடுத்துக்கொண்ட போலீசார், காணாமல் போன மாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சம்பந்தப்பட்ட பகுதியில் வர்த்தக சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டனர்.

 

அப்போது, சாத்தான்குளம் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதியில் காணாமல் போன இசக்கிதுரையின் மாட்டை மர்ம நபர் ஒருவர் இழுத்துச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அதை முழுவதுமாகப் பார்த்தபோது, கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில் கருப்பு நிற டீ ஷர்ட் மற்றும் நீல நிற லுங்கியில் வந்த மர்ம நபர் ஒருவர், மேய்ச்சலில் இருந்த மாட்டை கயிற்றைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளார்.

 

மேலும், அந்த மாட்டின் உரிமையாளர் போல சாவகாசமாக நடந்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. இத்தகைய சூழலில், அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கால்நடைகளைத் திருடிச் செல்லும் மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, அந்த நபரைக் கைது செய்வதற்காக வலைவீசித் தேடி வருகின்றனர். தற்போது, மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை நள்ளிரவு நேரத்தில் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.