Mysterious people pretending to be police and robbing jewelry

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபளையம் அருகே உள்ளது காரனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி 40 வயது அலமேலு. அண்ணாமலை வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். அவரது மனைவி அலமேலு, அவர்களுக்கு சொந்தமான காட்டுக்கொட்டாய் நிலப்பகுதியில் வீடு கட்டி குடியிருந்துவருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டனர். தனது ஒரு மகனுடன் காட்டுக்கொட்டாய் வீட்டில் வசித்துவந்தார் அலமேலு. இந்நிலையில், அலமேலு மகன் வேலை செய்வதற்காக கச்சிராபாளையம் சென்றிருந்தார். அன்றிரவு சுமார் 9 மணியளவில் அலமேலு மட்டும் கதவை சாத்திவிட்டு வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது டிப்டாப்பான மூன்று வாலிபர்கள் வீட்டுக்குள்ளே புகுந்தனர். அவர்கள் அலமேலுவிடம் நாங்கள் போலீஸ்காரர்கள், நீங்கள் வீட்டுக்குள் ஒரு சிறுமியை மறைத்து வைத்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரைக் காப்பாற்றுவதற்காக வந்துள்ளோம் என்று கூறிவிட்டு அலமேலுவின் பதிலைக் கூடக் காதில் வாங்காமல் அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அலமேலு அவர்களைத் தடுத்து, கத்தி சத்தம் போட்டுள்ளார். அவரை சத்தம் போடவிடாமல் இருவர் அவரைப் பிடித்துக்கொண்டனர். ஒருவர் வீட்டுக்குள் இருந்த பீரோவைத் திறந்து அதில் இருந்த செயினை எடுத்துக்கொண்டார். அதோடு அலமேலு கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் தாலி செயினையும் பறித்துக்கொண்டார்.

Advertisment

அதன்பிறகு அலமேலுவை வீட்டுக்குள் தள்ளி, வீட்டின் வெளிப்பக்கம் கதவைப் பூட்டிவிட்டு, அந்த 3 மர்ம நபர்களும் தப்பி ஓடிவிட்டனர். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த அலமேலு கத்தி சத்தமிட்டுள்ளார். மேலும், ஒரு பகுதியில் ஓரமாகக் கிடந்தஅவரது செல்ஃபோனை எடுத்து அவசர எண் நூறுக்குத் தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கதவைத் திறந்துவிட்டு அலமேலுவை காப்பாற்றியுள்ளனர். மேலும், காயமடைந்த அவரை அவரது உறவினர்களுக்குத் தகவல் அளித்து அவர்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இதுகுறித்து அலமேலு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று லட்சம் மதிப்புள்ள ஒன்பது சவரன் நகைகளைப் போலீஸ் போல நடித்து, வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.