/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8_196.jpg)
ஈரோடு அடுத்த நகராட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி இசக்கியம்மாள் (65). ஓய்வு பெற்ற ஆசிரியை. நேற்று இரவு இசக்கியம்மாள் தனது பேரக்குழந்தையுடன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் அங்கும் இங்குமாக நோட்டமிட்டவாறு சுற்றிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி இசக்கியம்மாள் அருகே சென்று முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்துள்ளார்.
இசக்கியம்மாள் கழுத்தில் 5 பவுன் தாலி அணிந்திருந்தார். அப்போது திடீரென அந்த நபர் 5 பவுன் தாலியை பறிக்க முயன்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட இசக்கியம்மாள் தாலிச் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். அந்த மர்மநபர் செயினை பிடித்து இழுத்ததில் அறை பவுன் மட்டும் அந்த நபர் கையில் சிக்கியது. அதை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏற்கனவே காத்திருந்த நபருடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இசக்கியம்மாள் ‘திருடன்... திருடன்...’ என கத்தினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். நல்ல வாய்ப்பாக இசக்கியம்மாள் தாலி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் நாலரை பவுன் தப்பியது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us