Skip to main content

பல்வேறு கோவில்களில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம கும்பல்! 

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

Mysterious group that damaged idols in various temples!
                                                     மாதிரி படம் 

 

பெரம்பலூர் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ளது சிறுவாச்சூர். இந்த ஊரில் பிரபலமான மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில், மாநிலங்களிலிருந்தும் இக்கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்தக் கோவிலிலிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் மலையடிவாரத்தில் இயற்கை சூழ்ந்த இடத்தில் பெரியசாமி, செங்கமல சாமி மற்றும் அதன் துணை தெய்வங்களாக கன்னிமார் சிலைகள், செல்லியம்மன் சிலை, கருப்புசாமி சிலை ஆகியவற்றைக் கொண்ட கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிலைகளை மர்ம கும்பல் ஒன்று கடந்த 4ஆம் தேதி இரவு அடித்து உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது. 

 

4ஆம் தேதி காலை பூசாரி ரங்கநாதன் கோவிலுக்குச் சென்று பூஜைகளை முடித்துவிட்டு மாலை ஆறு மணி அளவில் சிறுவாச்சூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்துவிட்டார். பிறகு அமாவாசை அன்று (6ஆம் தேதி) காலை ரங்கநாதன் பூஜை செய்வதற்காகக் கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்தக் கோவிலின் பத்துக்கும் மேற்பட்ட சாமி சிலைகள், மற்றும் கடவுளின் வாகனங்கள் அனைத்தும் உடைத்து சேதப்படுத்தப்பட்டு அலங்கோலமாகக் கிடந்துள்ளன. 

 

இதேபோல் சிறுவாச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இரண்டு கோயில் சிலைகளையும் மர்ம கும்பல் சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊர் மக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அறநிலையத்துறை செயல் அலுவலர் அருண்பாண்டியன், பெரம்பலூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து கோயில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். 

 

இந்த நிலையில், அப்பகுதியில் மர்மமான முறையில் சுற்றிக்கொண்டிருந்த நபரை ஊர் மக்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசுவதாகக் கூறப்படுகிறது. இதில் முறையான நடவடிக்கை தேவை. சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சிறுவாச்சூர் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி, சிலைகளை சேதப்படுத்தியவர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். 

 

மலையடிவாரத்தில் இருந்த செங்கமலையான், பெரியசாமி, செல்லியம்மன், கன்னிமார்கள் மற்றும் இவர்களின் வாகனங்களான குதிரைகள், யானை போன்ற சிலைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த சிற்பி குப்புசாமி தலைமையிலான குழுவினர் செய்தனர். அவர்கள், இக்கோவில் பகுதிக்கே வந்து சிலைகளை செய்வதற்கு உரிய மண்ணை தேர்வு செய்து, சிலைகளை அதே இடத்தில் சுடுமண் சிலையாக செய்துவைத்தனர். ஆசியாவிலேயே மிக உயரமான சுடுமண் குதிரை சிலை பண்ருட்டி அருகே உள்ளது. அதைவிட உயரமான சுடுமண் சிலையை செங்கமலையான் பெரியசாமி கோவில் வளாகத்தில் செய்து வைத்திருந்தனர். பலரையும் கவரும் வண்ணத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த சிலைகளைக் காண்பதற்கும், வழிபாடு செய்வதற்கும் அதிகளவிலான மக்கள் வந்துசெல்வார். அப்படி பிரம்மாண்டமான இந்த சிலைகளை சேதப்படுத்தியுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.