Skip to main content

தொடர்கதையாகும் ஆடுகளின் கோர மரணம்; "மர்ம விலங்கு நடமாட்டமா?" - வேதனையில் விவசாயிகள்

Published on 31/05/2021 | Edited on 31/05/2021
‘A series of deaths of goats stuffed in a bar, will the mysterious animal not move?’ - Farmers in agony

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் உள்ளது மூங்கில்துறைப்பட்டு. இதனருகில் உள்ள மணலூர், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தேவராஜ். விவசாயியான இவரும் இவரது மனைவி சரோஜாவும் விவசாயத் தொழில்கள் செய்வதோடு கூடுதல் வருமானத்திற்காக 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்கள். இந்த ஆடுகளை கல்வராயன் மலைப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார்கள். பின்பு மாலை நேரத்தில் தங்கள் நிலத்தில் கொண்டு வந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுவார்கள். 

 

மீண்டும் தினசரி காலையில் பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். இது போன்று நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல தேவராஜ் மனைவி சரோஜா பட்டிக்குச் சென்றுள்ளார். அங்கே அவர்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் பத்து ஆடுகள் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கடித்துக் குதறப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளன. மேலும், 10 ஆடுகள் கடித்துக் குதறப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சரோஜா தனது கணவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் துரைசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். கால்நடை மருத்துவர் துரைசாமி விரைந்து சென்று பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் எப்படி இறந்தன என்பது குறித்து ஆய்வு செய்ததோடு படுகாயமடைந்து ஆடுகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.

 

இறந்த ஆடுகளைப் பிரேதப் பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு சங்கராபுரம் தாசில்தாருக்கு ஆடுகள் இறந்ததற்கான அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளார். மேலும், கடந்த 14ஆம் தேதி இதே போன்ற சம்பவத்தில் 10 ஆடுகள் கடித்துக் குதறப்பட்டு இறந்து கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்து நடு இரவில் பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளைத் தாக்கி கடித்துக் குதறிச் சாகடிக்கும் மர்ம விலங்கு என்னவாக இருக்கும் அதைத் தேடிப்பிடிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

"இறந்துபோன ஆடுகளுக்கு அரசு இழப்பீடு தர வேண்டும், மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அந்த விலங்கைப் பிடிக்க வேண்டும்" என்று அப்பகுதியில் உள்ள கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் ஆடு மாடுகள் வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆடுகளைக் கடித்துக் குதறிச் சாகடித்து வரும் மர்ம விலங்குகள் ஆட்டத்தினால் இரவு நேரங்களில் விவசாய நிலத்திற்குப் பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் பாய்ச்ச செல்லும் விவசாயிகளும் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து வனத்துறையினர் விரைவில் தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.