கரூரில் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் திமுக ஒப்பந்ததாரருக்கு சொந்தமான டிப்பர் லாரியை தீ வைத்து கொளுத்திவிட்டு, ஓட்டுநர் மற்றும் சூப்பர்வைசரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கரூர் அடுத்த கோடங்கிபட்டி அருகில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திமுக ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்த டிப்பர் லாரி ஒன்றை நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், ஓட்டுநர் அன்பழகன், சூப்பர்வைசர் கிருஷ்ணமூர்த்தியுடன் ஓட்டிவந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம கும்பல் இருவரையும் தாக்கிவிட்டு கீழே தள்ளி, லாரியையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து அறிந்த கரூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து டிப்பர் லாரியில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். அதற்குள் லாரியின் முகப்புப்பகுதி எரிந்து நாசமானது. மேலும், சம்பவ இடத்திற்கு கரூர் சரக டி.எஸ்.பி தேவராஜ் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து தப்பியோடிய மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுநர் அன்பழகன் மற்றும் சூப்பர்வைசர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.