Skip to main content

மருத்துவரிடம் 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பல்! ஆப்பு வைத்த 'செல்ஃபோன் ஆப்!'

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

 Mysterious gang who robbed a doctor of 23 lakh rupees out of a desire to double the money!

 

சேலத்தில், பணம் இரட்டிப்பு ஆசை காட்டி மருத்துவரிடம் 23.35 லட்சம் ரூபாய் பறித்த மர்ம கும்பல் குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். 

 

சேலம் ராஜாஜி சாலையைச் சேர்ந்தவர் ஜெகதீசன், மருத்துவர். இவர், அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவருகிறார். 

 

கடந்த ஆகஸ்ட் மாதம், இவருடைய அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், நீங்கள் முதலீடு செய்யும் பணத்தைக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாகப் பெறலாம் என கூறப்பட்டிருந்தது. மேலும், இண்டன் என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. 

 

இதை நம்பிய மருத்துவர் ஜெகதீசன், அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொண்டார். செயலியில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்கு எண்ணிற்குக் கடந்த இரண்டு மாதமாக ஜெகதீசன், மொத்தம் 23.35 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். 

 

ஆனால், தன்னுடைய முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக்கித் தரப்படவில்லை என்றதோடு, திடீரென்று குறுந்தகவல் அனுப்பிய நபரிடமிருந்து மேலதிக தகவல் வருவதும் நின்று போனது. இதனால் சந்தேகமடைந்த ஜெகதீசன், செயலியில் குறிப்பிட்டிருந்த அலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு தன்னுடைய பணத்தைக் திருப்பிக் கேட்டுள்ளார். 

 

எதிர்முனையில் பேசிய நபரோ, பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டுமென்றால் வருமானவரித்துறைக்கு வரி செலுத்த வேண்டும். அதற்காக மேலும் 5 லட்சம் ரூபாய் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்தே, தான் வசமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.

 

இதுகுறித்து ஜெகதீசன், சேலம் மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகாரளித்தார். ஆய்வாளர் சந்தோஷ்குமார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார். 

 

மோசடியில் ஈடுபட்ட கும்பல், 6 வெவ்வேறு வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். 

 

இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறுகையில், ''அலைபேசியில் யாராவது தொடர்புகொண்டு வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, வங்கி கணக்கு எண், ஏடிஎம் ரகசிய எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைக் கேட்டால், அவற்றைக் கொடுக்க வேண்டாம். 

 

மக்களுடைய ஆசையைத் தூண்டும் தேவையில்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மோசடி ஆசாமிகள் நம்மிடம் இருந்து பணத்தைப் பறித்துக்கொள்வார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.