Mysterious gang hacks youth to hit in broad daylight in trichy

திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜின் மகன் அன்பு என்கிற அன்புராஜ். இவர் சரித்திர பதிவேடு சி பிரிவு குற்றவாளியாவார். இந்நிலையில் இன்று (28-01-2025) காலை, அவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் வாகன நிறுத்துமிடம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 க்கும் மேற்பட்ட கும்பல் பட்டப்பகலில் அன்புராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில், அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பு ராஜின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அன்புராஜ் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது உறவினர்கள் பதற்றத்துடன் ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் கொலை செய்த நபர்களை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Advertisment

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில் வேடுபறி நிகழ்ச்சியில் அன்புராஜ் முறை வாங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்த கோழி சண்டையில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்த கொலையை செய்தார்களா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.