Skip to main content

பட்டா கத்தியுடன் நுழைந்த மர்ம கும்பல்; அரசு மருத்துவமனையில் நடந்த திகில் சம்பவம்

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

mysterious gang committed an incident at the virudhunagar govt hospital with a belt knife

 

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூண்டு வியாபாரியான சின்னதம்பி. இவர், கடந்த மாதம் வியாபாரத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி போன்ற ஆயுதங்களால், சின்னதம்பியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த சின்னதம்பி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

இதையடுத்து, அந்த வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவராஜ் குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். அதே சமயம், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டபோது இவர்கள் இருவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், யுவராஜும் விக்னேஷும் கடந்த மாதம் 22ம் தேதியில் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இந்நிலையில், சின்னதம்பி கொலைக்கு பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், 10 பேர் கொண்ட மர்ம கும்பல் 17ஆம் தேதியன்று விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளனர். அப்போது, அந்த மருத்துவமனையின் 4வது தளத்தில் சிகிச்சையில் இருந்த யுவராஜ் குமார் மற்றும் விக்னேஷை கொலை செய்ய திட்டமிட்ட மர்ம கும்பல், திடீரென உள்ளே நுழைந்து அங்கு துப்பாக்கியுடன் காவலில் இருந்த திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர்களான சிலம்பரசன் மற்றும் அழகுராஜ் ஆகியோர் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசியுள்ளனர்.

 

அதன்பிறகு, படுக்கையில் இருந்த யுவராஜ் குமார் மீதும் விக்னேஷ் மீதும் மிளகாய்ப் பொடியை வீசிய மர்ம கும்பல், அந்த வார்டுக்குள் வைத்து அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நோயாளிகளும் பொதுமக்களும் அங்கிருந்து அலறியடித்து ஓடத் தொடங்கியுள்ளனர். பின்னர், சுதாரித்துக்கொண்ட காவலர்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து குற்றவாளிகளை குறிவைத்துள்ளனர்.

 

இதனால் பதற்றமடைந்த மர்ம கும்பல், காவலர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும், இச்சம்பவத்தால் மருத்துவமனை முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த விருதுநகர் கிழக்கு போலீசார், காயமடைந்த யுவராஜ், விக்னேஷ் மற்றும் காவலர்கள் ஆகியோரை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.