Skip to main content

மர்மமான முறையில் பெண் சடலம்..! கொலையாளியை பிடித்த காவல்துறையினர்..! 

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

Mysterious female corpse ..! police caught accused

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ளது பால்ராம்பட்டு எனும் கிராமம். இந்தக் கிராமத்தினை ஒட்டிச் செல்லும் சாலையோரம் 14ஆம் தேதி காலை, நடுத்தர வயது பெண்மணி ஒருவர் கழுத்து, கை, கால் உட்பட அவரது உடம்பில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு  இறந்துகிடந்துள்ளார். அவ்வழியே சென்ற கிராமத்து மக்கள் இந்தக் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டனர். உடனடியாக கச்சராபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

 

உடனடியாக கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராமநாதன், இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்துகிடந்த அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், கொலை செய்யப்பட்ட பெண் யார், அவரை எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்து கொலையாளியைக் கைதுசெய்ய வேண்டி டி.எஸ்.பி. ராமநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். 

 

இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களது விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சின்னசேலம் அருகே உள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கீதா, வயது 37 என்பதும், இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயானவர் என்பதும்  தெரியவந்தது. மேலும், இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சங்கீதா தனது 2 ஆண் குழந்தைகளுடன் அம்மாபேட்டை பகுதியில் வசித்துவந்துள்ளார். 

 

இந்த நிலையில், சங்கீதாவின் பெண் தோழி ஒருவர் மூலம் சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது விவசாயி கந்தன் என்பவர் சங்கீதாவுக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரது அறிமுகம் திருமணத்திற்கு மீறிய உறவானது. ஒருகட்டத்தில் இருவரும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவிபோல் வாழ்ந்துவந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், சங்கீதாவுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று கந்தன் சந்தேகம் அடைந்துள்ளார். 

 

இதனால் கந்தனுக்கும் சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடந்துவந்துள்ளது.  இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி சங்கீதா ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி இனிமேல் கந்தனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பேசி முடிவு செய்துள்ளார். இதை உறுதிசெய்ய கந்தனிடமிருந்து எழுத்து மூலம் எழுதி வாங்கிக்கொண்டு, இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் சங்கீதா தனது 2 மகன்களுடன் மீண்டும் அம்மாபேட்டை சென்று தனியாக வசித்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் 14ஆம் தேதி அதிகாலை பல்ராம்பட்டு கிராம சாலை ஓரம் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். 

 

இந்த தகவல்களை விசாரணையின் மூலம் கண்டறிந்த போலீசார், சங்கீதாவின்  முன்னாள் கணவர் கந்தனை தேடிப்பிடித்து கைதுசெய்தனர். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், சங்கீதா தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்.  அதனால் சங்கீதாவின் மீது கடும் கோபத்தில் இருந்ததாகவும் அந்த ஆத்திரத்தின் காரணத்தால் சங்கீதாவை வெட்டிக் கொலை செய்துள்ளதாக தனிப்படை போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.