Skip to main content

திருமணமான 45 நாளில் இளம்பெண் மர்ம மரணம்! கணவர் கைது!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

Mysterious death of a girl in 45 days of marriage! Husband arrested!

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் வரம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் பொறியியல் பட்டதாரியான சபரிநாதன்(30). இவருக்கும், விருத்தாசலம் நகரத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரின் இரண்டாவது மகள் நிலா (22) என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 04ஆம் தேதி விருத்தாசலம் பகுதியில் திருமணம் நடைபெற்றது.  

 

திருமணமான பின் நிலா வரம்பனூரில் உள்ள தனது கணவர் வீட்டில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்துள்ளார்.  ஆனால் திருமணமானதிலிருந்து நிலாவிடம் அவரது கணவர் சபரிநாதன் சரிவர பேசவில்லை என்றும் இதனால் நிலா மனவருத்தத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் நிலாவின் மாமனார், மாமியார் வெளியூர் சென்றுவிட்டனர். அவரது கணவரும் விவசாய வேலைக்காக வெளியே சென்றிருந்த நிலையில் நிலா மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். காலை 11 மணி அளவில் கணவர் சபரிநாதன் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது நிலா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த நிலாவின் தாயார் ஜெயந்தி, சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த பெண்ணின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார். அதையடுத்து வேப்பூர் போலீசார் வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து நிலாவின் தாயார் ஜெயந்தி, விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் கொடுத்த புகாரில், “எனது மகளின் திருமணத்தின் போது எல்லா சீர் வரிசைகளையும் செய்து கொடுத்தோம். ஆனால் திருமணமான ஒரு வாரத்தில் மாப்பிள்ளை வீட்டார் எனது மகளிடம் 40 பவுன் நகை கேட்டுத் தொந்தரவு செய்துள்ளனர். மேலும், எனது மகளிடம் அவரது கணவர் சரிவர பேசாததால் மன வருத்தம் அடைந்துள்ளார். திருமணமான 45 நாட்களே ஆன நிலையில் எனது மகள் தற்கொலை செய்து கொண்டதில், எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. எனவே எனது மகளின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் அவரது கணவர் சபரிநாதன் மற்றும் அவரது உறவினர்களை விசாரிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

Ad

 

இதையடுத்து திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் உத்தரவின்பேரில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தற்கொலைக்குத் தூண்டியதாக, சபரிநாதன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். திருமணமாகி ஒன்றரை மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.