Mysterious Boy Rescued and Young girl's confession

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சிந்துமதி. இந்தத்தம்பதியருக்கு அனீஸ் (8) என்ற மகன் இருந்தார். அனீஸ் அங்குள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டின் அருகே மாலை விளையாடிக் கொண்டிருந்த அனீஸ்வீடு திரும்பாத நிலையில், பதற்றமடைந்த சுரேஷ் மற்றும் சிந்துமதி தம்பதி அனீஸை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

Advertisment

இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பாதிரிவேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், சிறுவனைப் பற்றி எந்தத்தகவலும் கிடைக்காத காரணத்தினால் சிறுவனை மீட்பதில் அலட்சியம் காட்டுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

இதையடுத்து, காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். மேலும்,சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தியதில், சிறுவனை பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி ரேகா (30) தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதைப் பார்த்ததாகச் சிலர் தெரிவித்தனர்.

அதன் பேரில், அவரைக் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், சிறுவன் அனீஸை கடத்திச் சென்று ஆந்திரா மாநிலம் வரதபாளையம் பகுதியில் கொலை செய்து பிளாஸ்டிக் பையில் மூட்டைக் கட்டி புதரில் வீசிச் சென்றதாக அதிர்ச்சி தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து, ஆரம்பாளையம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் இரண்டு தனிப்படைகளை அமைத்து அந்தப் பகுதியில் தேடி வந்தனர்.

Advertisment

அப்போது, அங்குள்ள ஒரு காட்டுப் பகுதியில் சிறுவன் அனீஸ் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இதையடுத்து, சடலமாகக் கிடந்த சிறுவனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக காளாஸ்திரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ரேகாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.