Skip to main content

சாலையோரம் கிடந்த மர்ம பைக்; போலீஸார் தீவிர விசாரணை!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
Roadside mystery bag; Handing over to the right person after serious investigation

 

நேற்று முன்தினம் பெண்ணாடம் அருகிலுள்ள தாழநல்லூர் ஏரிக்கரை பகுதியில் ஆள் நடமாட்டம் அற்ற விழல் புல் நிரம்பிய புதற்பகுதியில் இருசக்கர வாகனம் யார் கண்ணிலும் தென்படாமல் மர்மமான முறையில் கேட்பாரற்று கிடந்துள்ளது. அப்பகுதிக்கு ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற பெண்ணாடம் போலீஸார் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தை மீட்டெடுத்தனர். 

 

அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் இந்த இரு சக்கர வாகனம் யாருடையது, இங்கே கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றது யார் என்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள யாருக்கும் அந்த இரு சக்கர வாகனம் சொந்தமானதில்லை, அதை யார் இங்கு கொண்டுவந்து போட்டார்கள் என்பதும் தெரியவில்லை, என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அந்த இருசக்கர வாகனம் சென்னை பதிவெண் கொண்டது என்பதை ஆய்வு செய்து கண்டறிந்த போலீஸார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

இந்நிலையில், அதே பெண்ணாடம் அருகே உள்ளது பெலாந்துறை என்ற கிராமம். அங்கிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோணம் என்ற ஊருக்குச் செல்லும் சாலையோர பகுதியில் நேற்று மாலை மர்மமான துணிப்பை ஒன்று கிடந்துள்ளது. இதை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் நீண்ட நேரமாகப் பார்த்துவிட்டு, யாரும் அதைத் தேடி வந்து எடுத்துச் செல்லாததைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீஸார் விரைந்து வந்து அங்கு கிடந்த துணிப்பையை மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதனுள்ளே இரண்டு ஏடிஎம் கார்டுகள், ஆயிரம் ரூபாய் பணம், ஒரு இருசக்கர வாகனத்தின் சாவி, வீட்டுச் சாவி, மின் கட்டண ரசீது, ஆகியவையும், சாலைப் பணியாளராக வேலை செய்யும்  ஒருவரது அடையாள அட்டையும் இருந்துள்ளது. 

 

இதையடுத்து அந்த அடையாள அட்டையிலிருந்த முகவரியில் போலீஸார் தொடர்பு கொண்டுள்ளனர். அதன்மூலம் பையின் உரிமையாளர் மருவாய் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பதும், இவர் குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சாலைப் பணியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர்களது உறவினர் ஊருக்குச் சென்று விட்டுத் திரும்பி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அதில் மாட்டியிருந்த பை தவறி விழுந்ததைக் கவனிக்காமல் சென்றுள்ளதை விசாரணையில் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து செல்வராஜை கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீஸார் அவரிடம் பொருட்களை அடையாளம் காட்டச் சொல்லி ஒப்படைத்தனர். அதோடு இதுபோன்ற அலட்சியமாக இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தல் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 2 பேர் உயிரிழப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
manipur Churachandpur District sp office incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் என்பவர் கடந்த 14 ஆம் தேதி ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சியாம் லால் பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து குக்கி சமூகத்தினர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடினர்.

அப்போது கூட்டத்தை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.