Skip to main content

சாலையோரம் கிடந்த மர்ம பைக்; போலீஸார் தீவிர விசாரணை!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
Roadside mystery bag; Handing over to the right person after serious investigation

 

நேற்று முன்தினம் பெண்ணாடம் அருகிலுள்ள தாழநல்லூர் ஏரிக்கரை பகுதியில் ஆள் நடமாட்டம் அற்ற விழல் புல் நிரம்பிய புதற்பகுதியில் இருசக்கர வாகனம் யார் கண்ணிலும் தென்படாமல் மர்மமான முறையில் கேட்பாரற்று கிடந்துள்ளது. அப்பகுதிக்கு ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற பெண்ணாடம் போலீஸார் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தை மீட்டெடுத்தனர். 

 

அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் இந்த இரு சக்கர வாகனம் யாருடையது, இங்கே கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றது யார் என்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள யாருக்கும் அந்த இரு சக்கர வாகனம் சொந்தமானதில்லை, அதை யார் இங்கு கொண்டுவந்து போட்டார்கள் என்பதும் தெரியவில்லை, என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அந்த இருசக்கர வாகனம் சென்னை பதிவெண் கொண்டது என்பதை ஆய்வு செய்து கண்டறிந்த போலீஸார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

இந்நிலையில், அதே பெண்ணாடம் அருகே உள்ளது பெலாந்துறை என்ற கிராமம். அங்கிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோணம் என்ற ஊருக்குச் செல்லும் சாலையோர பகுதியில் நேற்று மாலை மர்மமான துணிப்பை ஒன்று கிடந்துள்ளது. இதை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் நீண்ட நேரமாகப் பார்த்துவிட்டு, யாரும் அதைத் தேடி வந்து எடுத்துச் செல்லாததைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீஸார் விரைந்து வந்து அங்கு கிடந்த துணிப்பையை மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதனுள்ளே இரண்டு ஏடிஎம் கார்டுகள், ஆயிரம் ரூபாய் பணம், ஒரு இருசக்கர வாகனத்தின் சாவி, வீட்டுச் சாவி, மின் கட்டண ரசீது, ஆகியவையும், சாலைப் பணியாளராக வேலை செய்யும்  ஒருவரது அடையாள அட்டையும் இருந்துள்ளது. 

 

இதையடுத்து அந்த அடையாள அட்டையிலிருந்த முகவரியில் போலீஸார் தொடர்பு கொண்டுள்ளனர். அதன்மூலம் பையின் உரிமையாளர் மருவாய் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பதும், இவர் குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சாலைப் பணியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர்களது உறவினர் ஊருக்குச் சென்று விட்டுத் திரும்பி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அதில் மாட்டியிருந்த பை தவறி விழுந்ததைக் கவனிக்காமல் சென்றுள்ளதை விசாரணையில் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து செல்வராஜை கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீஸார் அவரிடம் பொருட்களை அடையாளம் காட்டச் சொல்லி ஒப்படைத்தனர். அதோடு இதுபோன்ற அலட்சியமாக இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தல் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 2 பேர் உயிரிழப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
manipur Churachandpur District sp office incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் என்பவர் கடந்த 14 ஆம் தேதி ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சியாம் லால் பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து குக்கி சமூகத்தினர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடினர்.

அப்போது கூட்டத்தை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

துப்பாக்கிச்சூடு சம்பவம்; பாஜக எம்எல்ஏ கைது!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
maharashtra ulhasnagar police station bjp mla issue

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திற்கு உட்பட்ட உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட், சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட் இருவரும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக புகாரளிக்க வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மகேஷ் கெய்க்வாட்டை, பாஜக எம்.எல்.ஏ. கணபத் கெயிக்வாட் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகேஷ் கெய்க்வாட் உள்ளிட்ட 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மகேஷ் கெய்க்வாட்டின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாஜக எம்எல்ஏ ஒருவர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கன்பத் கெய்க்வாட் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தானே மாவட்ட போலீஸ் டி.சி.பி. சுதாகர் பதரே கூறுகையில், “ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற மூவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐபிசி மற்றும் ஆயுதச் சட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆர்  பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.