ADVERTISEMENT

''என் பொண்ணு கேஷுவலாக கேட்டாள் 'அடுத்து எப்போ சார் வரப்போறீங்கன்னு' ''- விஜயபாஸ்கர் பேட்டி

08:18 PM Sep 13, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று (13/09/2022) அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.



முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 18.37 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1,872 கிராம் தங்கம், 8.28 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ குழும விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சான்று தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 4 வங்கி பெட்டக சாவிகள் கைப்பற்றப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை அடையாறில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ''நான் குடியிருக்கிறது அப்பார்ட்மெண்ட். 3 ரூம், ஒரு ஹால், 2000 ஸ்கொயர் ஃபீட். 12 மணி நேரம் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஒரு முழுமையான அரசு இயந்திரத்தை எத்தனையோ மக்கள் பிரச்சனையையெல்லாம் மறந்துவிட்டு ஒரு தனிப்பட்ட நபரின் மீது கொண்ட காட்டத்தால், அரசியல் காழ்ப்புணர்ச்சியினுடைய உச்சகட்டத்தினுடைய பிரதிபலிப்பாக இந்த சோதனையை கருதுகிறேன். முதலில் இந்த இக்கட்டான காலகட்டத்தில் எங்களுக்கு கழக ரீதியாக துணை நின்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், நேரில் வருகை தந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், காலையிலிருந்து இங்கே இருக்கக்கூடிய மாவட்ட கழகத்தினுடைய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் உள்ளிட்ட இங்கே இருக்கக்கூடிய வட்டக் கழக, பகுதி கழக அனைத்து நிர்வாகிகள், புதுக்கோட்டை மாவட்டத்தின் கழக நிர்வாகிகள் என அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏற்கனவே இதே போன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை நான் எதிர் கொண்டிருக்கிறேன். திரும்பவும் இரண்டாவது முறையாக சோதனையின் நடைபெற்றுள்ளது. அவர்கள் கொடுத்த ரிட்டன் காப்பியில் எதுவுமே கைப்பற்ற முடியாமல் கடைசியாக என்கிட்ட இருந்த 2 மொபைல் போனை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று உள்ளார்கள். என்னுடைய ஆதார் கார்டு, மனைவியின் ஆதார் கார்டு, குழந்தைகளின் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் என முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. போகும்போது கூட என் பொண்ணு கேஷுவலாக கேட்டாள் 'அடுத்து எப்போ சார் வரப்போறீங்கன்னு' அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கக்கூடிய நேரத்தில் மூன்று ரூமையும், ஒரு ஹாலையும் சோதனை செய்வதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT