Skip to main content

"என் பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கிறது, ஆனால்..." - கடிதம் எழுதிவைத்து உயிரை விட்ட பெண்

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

"My children could not be separated .." - Letter written by the woman before her death

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள மேல் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜாதா(32). கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் சுஜாதாவிற்கும் திருமணம் நடந்துள்ளது. இதில் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.  இவர்கள் இருவரும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பூர் அருகில் உள்ள பில்லூர் பகுதியில் ஒருவரது நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அங்கேயே தங்கி விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தேதி சுஜாதா வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வந்து சேரவில்லை. மனைவி சுஜாதா காணாமல் போனதால் அவரை வெங்கடேசன் பல்வேறு இடங்களிலும், உறவினர் வீடுகளிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

 

இதையடுத்து அவர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை 8 மணி அளவில் வெங்கடேசன் தனது குத்தகை நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது அங்குள்ள பாசன கிணற்றில் சுஜாதா இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து வெங்கடேசன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுஜாதா உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

 

இதுகுறித்து சுஜாதாவின் தாய் வளர்மதி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது இறப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள், சுஜாதா அணிந்திருந்த மேலாடைக்குள் இருந்து ஒரு பாலிதீன் கவருக்குள் வைக்கப்பட்டிருந்த கடிதம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். அதனை அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 

 

சுஜாதா எழுதிய கடிதத்தில், ’எனது இரு பிள்ளைகளும் ஆத்தூர் அருகில் உள்ள களரம்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவர்களைப் பார்க்கச் செல்வதற்கு மிகவும் ஆசையாக உள்ளது. ஆனால், நீண்ட நாட்களாகவே கணவர் வெங்கடேசன், எனது மாமனார் நல்லதம்பி, மாமியார் ஜெயலட்சுமி ஆகியோர் தடை செய்கின்றனர். எனது இரு பிள்ளைகளையும் பிரிந்து நீண்ட நாட்கள் என்னால் இருக்க முடியவில்லை. பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்ற பாசம் அதிகமாக உள்ளது. அங்கு என்னைச் செல்லவிடாமல் இவர்கள் மூவரும் தடுத்து வருகிறார்கள். இவர்களால் என் வாழ்க்கையில் நிம்மதியே இல்லை. அதிலும் என் கணவரின் துன்புறுத்தலால் நான் நிம்மதி இழந்து நிற்கிறேன்’ என்று அந்தக் கடிதத்தில் அவர் எழுதி வைத்திருக்கிறார். 

 

இதையடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் வெங்கடேசன் மீது வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்