Skip to main content

அதிர வைத்த துப்பாக்கி முனை கொள்ளை...! கொள்ளையர்களை கஸ்டடியில் எடுக்க அனுமதி..

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

muthoot finance robbery court allowed police to took robberies in custody

 

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் 7 பேரையும் பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நகை அடகு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில், கடந்த 22ஆம் தேதி 7 பேர் கொண்ட வடமாநில கும்பல், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி, அங்கிருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. 

 

தெலுங்கானா மாநிலம் சைபராபாத் அருகே, ஒரு லாரி மற்றும் காரில் தப்பிச் செல்ல முயன்றபோது, அம்மாநில போலீசார் உதவியுடன் ஓசூர் ஹட்கோ போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ நகைகள், 7 கைத்துப்பாக்கிகள், 96 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

 

விசாரணையில் அந்தக் கொள்ளையர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரூப்சிங் பாகல், சங்கர் சிங் பாகல், பவன்குமார் விஸ்கர்மா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த பூபேந்தர் மஞ்சி, விவேக்மண்டல், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த டேக்ராம், ராஜீவ்குமார் எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த 7 பேரையும் உடனடியாக சைபராபாத் சிறையிலேயே அடைத்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் (26.01.2021) அவர்களை ஓசூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர். 

 

முதல்கட்ட விசாரணை முடிந்ததை அடுத்து, அவர்களை புதன்கிழமை (ஜன. 27) ஓசூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மேலும், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முத்தூட்' கொள்ளை வழக்கு - 7 பேருக்கு நீதிமன்றக் காவல்!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

muthoot finance incident hosur court order police


முத்தூட் நிறுவன கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

கடந்த ஜனவரி 22- ஆம் தேதி ஓசூரில் உள்ள முத்தூட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிளை ஒன்றில், துப்பாக்கி முனையில் ரூபாய் 12 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். 

 

மேலும், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்தனர். அதேபோல், கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினரின் உதவியுடன் ஹைதராபாத்துக்கு அருகே கொள்ளையர்களைச் சுற்றி வளைத்துத் தனிப்படை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

 

பின்பு, கொள்ளையர்களை ஓசூருக்கு அழைத்து வந்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். 10 நாள் போலீஸ் காவலில் வைத்து, காவல்துறையினர் விசாரித்த நிலையில், கொள்ளையர்களை இன்று (06/02/2021) மீண்டும் ஓசூர் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து, கொள்ளையர்களை பிப்ரவரி 20- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 


 

Next Story

நாளை ஓசூர் அழைத்து வரப்படும் கொள்ளையர்கள்!

Published on 24/01/2021 | Edited on 24/01/2021

 

muthoot finance incident police investigation

முத்தூட் பைனான்ஸ் நிறுவன கொள்ளை வழக்கில் கைதான 9 பேரும் நாளை (25/01/2021) ஓசூர் அழைத்து வரப்படுகின்றனர்.

 

ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளையில் நேற்று முன்தினம் (ஜனவரி 22- ஆம் தேதி) அன்று துப்பாக்கி முனையில் ரூபாய் 12 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அங்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதேபோல், கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

 

இந்த நிலையில், ஹைதராபாத் அருகே சமசத்பூர் என்ற இடத்தில் கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் உள்பட 5 பேரை கைது செய்தனர். லாரியைப் பின் தொடர்ந்து வந்த காரை சந்தேகத்தின் பேரில் மடக்கிய காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அதையடுத்து, காரியில் இருந்த நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட 9 பேரிடமிருந்து 25 கிலோ தங்க நகைகள், பணம், துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்து, ஹைதராபாத் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

இந்த நிலையில் கைதான 9 பேரையும் காவல்துறையினர் நாளை (25/01/2021) ஓசூருக்கு அழைத்து வருகின்றனர். பின்பு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.