Skip to main content

“காந்தியைக் கொன்ற வெறி இன்னும் அடங்கியபாடில்லை!” -சிவகாசியில் முத்தரசன் விளாசல்!

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

 

mutharasan election campaign in sivakasi

 

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலானது ஏதோ இரு கட்சிகளுக்கான போட்டி அல்ல. அல்லது,  இருநபர்களுக்கான போட்டி அல்ல. இந்தத் தேர்தலானது,  ஒரு மாபெரும் அரசியல் யுத்தமாகும். அப்படி ஒரு யுத்தத்தை நடத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஒரு அரசியல் யுத்தமாக இதைப் பார்க்கவேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒரு பிரச்சனையாகப் பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தோமேயானால், தவறான முடிவுகளுக்கு வழிவகுத்துவிடும். எதிர்க்கட்சி தரப்பில் பேசுகின்ற  முதலமைச்சர் உள்ளிட்ட அத்தனைபேரும், நாட்டிலுள்ள பிரச்சனைகள் குறித்தோ, தங்களுடைய ஆட்சியில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் குறித்தோ பேசுவதற்கு மாறாக, தனிநபர் தாக்குதலைத் தொடுத்து, பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பும்விதமாக, எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

 

mutharasan election campaign in sivakasi

 

பட்டாசுத் தொழில், அச்சுத் தொழில், தீப்பெட்டித் தொழில் பாதிப்பு மட்டுமல்ல. விவசாயத்திலும் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஒருகுடம் தண்ணீர் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதையெல்லாம் தடுப்பதற்கு வக்கற்ற அரசாங்கமாக இன்றைக்கு இருக்கின்ற அரசாங்கம் இருக்கிறது. 

 

 

அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்கு  மாறாக அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஆட்சி நடத்திக்கொண்டு, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கித் தந்திருக்கிற அமைப்புக்களையெல்லாம் சீர்குலைக்கக்கூடிய நடவடிக்கைகளை மோடி சர்க்கார் செய்துகொண்டிருக்கிறது. சர்வாதிகாரமாக, ஒரு பாசிச ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். தேசப்பிதா மகாத்மா காந்தி கொல்லப்பட்டது எல்லாருக்கும் நினைவில் இருக்கும். நாடு விடுதலை பெற்றபிறகு, ஆறுமாதம்கூட இந்த தேசத்தில் அவரால் உயிர்வாழ முடியவில்லை. சுட்டுக்கொன்றார்கள். யார் சுட்டுக்கொன்றது என்று அனைவருக்கும் தெரியும். மோடி இருக்கிற கட்சியைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த கோட்சே என்ற கொடியவன்தான் காந்தியைச் சுட்டுக்கொன்றான். அந்த வெறி இன்னும் அடங்கியபாடில்லை. நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மா காந்திக்கே இந்த நிலை என்றால், இந்த ஆட்சி யாருடைய ஆட்சி? மகாத்மா காந்தியை ஏன் கொன்றார்கள்? மதச்சார்பற்ற கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார். பா.ஜ.க. தலைவர்கள் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தல் என்பதே நடைபெறாது என்கிறார்கள். இதன் பொருள் என்ன? இனிமேல் இந்த நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே நாட்டில் இருக்கும் என்பதுதான். . இது ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் ஒருபோதும் பாசிசத்தை அனுமதிக்க மாட்டோம் என்பதற்கான தேர்தலாகத்தான் நாம் பார்க்க வேண்டும். 

 

 

காவிரி நதிநீர் விவகாரத்தில் இறுதியாக  வழங்கிய தீர்ப்பில் இதற்கென ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறியது உச்சநீதிமன்றம்.  ஆனால் இதுவரை நிரந்தரமாக ஒரு தலைவரை மொடி அரசு அமைக்கவில்லை. எடப்பாடி சர்க்காரும் அதைக் கேட்கவில்லை. கர்நாடகாவில் மேகதாது  அணை கட்டுவதற்கு அனுமதி தர முடியாது என்று கூறாமல் தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்தது மோடி அரசு. அந்தக் கட்சியுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறது அதிமுக. 

 

 

அதிமுகவை மிரட்டிப் பணிய வைத்து ஐந்து தொகுதிகளை பெற்றுள்ளது பா.ஜ.க.  இன்னொரு கட்சி ரூ.400 கோடி விலைபேசி  வாங்கப்பட்டது. இன்னொரு கட்சியில் என்ன நடக்கிறது என்று அந்தக்கட்சியின் தலைவருக்கே தெரியாது. ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, முதலமைச்சர் பதவியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று எடப்பாடி பாடுபடுகிறார். எங்கள் கூட்டணி இயல்பாக அமைந்த கூட்டணி.  

 

இவ்வாறு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து வார்த்தைக்கு வார்த்தை விளாசினார் முத்தரசன். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர்” - முத்தரசன் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Mutharasan condoles the demise of MP Ganesamoorthy

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருந்த மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ. கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று (28.03.2024) அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தி.மு.கழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தி.மு.கழக வேட்பாளராகத் தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர்.

1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர். 1980களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று  தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கியவர்களில் அ. கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ. கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறிகொடுத்து விட்டது.

அ. கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அ. கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.