Mutharasan condemns Action should be taken against the police

மக்கள் பிரதிநிதிகளான மாமன்ற உறுப்பினர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட போலீசார் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்தால் சொத்துவரி உயர்த்திய நடவடிக்கைக்கு வரி செலுத்துவோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்கள் உணர்வை அரசுக்கு தெரிவித்து, வரி உயர்வை மறுபரிசீலனை செய்து, உயர்த்தப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை திருப்பூர் மாநகராட்சி மாமன்ற துணை மேயர் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் இன்று (28.11.2024) நடந்த மாமன்ற கூட்டத்தில் முன்மொழிய, மன்ற விதிமுறைகளை பின்பற்றி உரிய முறைப்படி அணுகியுள்ளனர்.

ஆனால், மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் தீர்மானத்தை மேயரும், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் குறுக்கு வழியில் நிராகரித்து, மற்ற தீர்மானங்களை நிறைவேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில் துணை மேயர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சிக்கு முன்பு, சாலையில் அமர்ந்து அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்களை, காவல்துறை தலையிட்டு பலவந்தமாக அகற்றும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளரும், மாமன்றக் குழு தலைவருமான எஸ்.ரவிச்சந்திரனின் கைகளை பற்றி, இழுத்து தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட திருப்பூர் காவல் துறையின் அநாகரிக செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், மக்கள் உணர்வுகளை பிரதிபலித்து செயல்படும் மக்கள் பிரதிநிதிகளான மாமன்ற உறுப்பினர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட போலீசார் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.