Skip to main content

'எங்கள் விடுதலை குறித்து முடிவெடுங்கள்' – சிறையில் முருகன் உண்ணாவிரதம்

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
m


முன்னால் இந்திய பிரதமர் இராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக  நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ் என 7 பேர் சிறையில் உள்ளனர். இதில் ஆயுள்தண்டனை கைதிகளாக ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ், தூக்குதண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.


இரண்டு ஆயுள்தண்டனையை அனுபவித்துவிட்டோம் எங்களை விடுதலை செய்யுங்கள் என ஒவ்வொருவரும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இறுதியில் தமிழக அரசே முடிவெடுத்துக்கலாம் என கூறிவிட்டது.


அந்த தீர்ப்பு வந்து சில மாதங்கள் ஆன நிலையில், அவர்களை விடுதலை செய்யலாம் என தமிழகத்தை ஆளும் அரசின் அமைச்சரவை தீர்மானம் இயற்றி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிவைத்தது. அவர் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த 4 மாதமாக கிடப்பில் வைத்துள்ளார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென பல தமிழ் அமைப்புகள், முக்கிய அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தும் இதுவரை கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இந்நிலையில் தங்கள் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்க வேண்டுமென வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக நாம் விசாரித்தபோது, வேலூர் ஆண்கள் சிறையில் முருகனும், பெண்கள் சிறையில் நளினியும் உள்ளனர். கணவன் – மனைவியான இருவரும் 15 தினங்களுக்கு ஒருமுறை பெண்கள் சிறையில் சந்தித்து உரையாடுவார்கள். அதன்படி ஜனவரி 19ந்தேதி காலை நளினி – முருகன் சந்திப்பு 1 நேரம் நடைபெற்றது.


மனைவியை சந்தித்துவிட்டு சிறைக்கு திரும்பிய முருகன், சிறை கண்காணிப்பாளரிடம், தனது விடுதலை குறித்து கவர்னர் முடிவெடுப்பதில் தாமதப்படுத்துவதால் உடனே முடிவெடுக்க வேண்டுமெனக்கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறேன் என ஜனவரி 19ந்தேதி மதிய உணவை மறுத்து உண்ணாவிரதத்தை தொடங்கினார். இரவும் உணவை மறுத்துவிட்டார்.


சிறைவிதிகளின் படி 2 வேளை உணவை எடுத்துக்கொள்ளவில்லையென்றால் உண்ணாவிரதத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன்படி ஜனவரி 20ந்தேதி சிறைத்துறை சார்பில், முருகன் உண்ணாவிரதம் இருப்பதை அங்கீகரித்து அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தியுள்ளனர். சிறை அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முருகன் உண்ணாவிரதம்!!!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

 Rajiv Gandhi Case - Murugan

 

முன்னாள் இந்திய பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்தவருமான ராஜிவ்காந்தி, 1991 மே மாதம் மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் என 4 பேருக்கு மரண தண்டையும், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் என 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கருணை அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஆயுள்தண்டனையாக குறைத்தது.


சுமார் 28 ஆண்டுகாலமாக சிறையில் இருப்பதால் தாங்கள் இரண்டு ஆயுள்தண்டனை காலத்தை கடந்துவிட்டோம், எங்களை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும், சட்டப்போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இதனை பாஜக அரசும், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் கண்டுக்கொள்ளவில்லை.

இதற்கிடையில் சிறைக்கைதி முருகனின் தந்தை சில வாரங்களுக்கு கேன்சர் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிர் போராட்டத்தில் இருந்தபோது, தன் மகனுடன் வீடியோ காலில் பேச விரும்பினார். இதுதொடர்பாக முருகன் தரப்பில் சிறைத்துறை தரப்பில் அனுமதி கேட்டார் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் முறையிட்டுயிருந்தார். அந்த வழக்கு நடக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். இப்போதும் அதுகுறித்த வழக்கு நடைபெற்றுவருகிறது.

 

 


இந்நிலையில், தான் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டுமென முருகன் தரப்பில் சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை முன்வைத்து கடந்த ஜீன் 2ந்தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். இந்த தகவலை 4 நாட்களுக்கு பின்பே சிறைத்துறை வெளியிட்டது. கடந்த 8 நாட்களாக சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென முருகனிடம், சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
 

Next Story

வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை!- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

nalini, murugan whatsapp video call chennai high court


நளினி மற்றும் முருகனை வாட்ஸ்- அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன்  சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத்  தாக்கல் செய்துள்ளார். அந்த  வழக்கில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம்  வாட்ஸ்- அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும். மேலும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். ஏற்கனவே, காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் முருகன் பார்ப்பதற்கு, தமிழக அரசு அனுமதிக்காததையும்   சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அயல்நாடுகளில் இருப்பதால், இது மத்திய வெளிவிவகாரத்துறை சம்பந்தபட்டது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.