
மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு இன்று (22.06.2025) நடைபெற்று வருகிறது. அதாவது மதுரை பாண்டி கோவில் அருகே தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டையொட்டி கடந்த 10ஆம் தேதி முதல் இன்று வரை தினந்தோறும் அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோவில்களை அமைத்து தினந்தோறும் வழிபாடு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வருவதால் அப்பகுதியில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து மதுரை மாநகருக்குச் செல்லக்கூடிய சாலையில் சுமார் 4 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. இதன் காரணமாக இந்த பகுதியில் பயணிக்கக்கூடிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதே சமயம் போக்குவரத்து காவலர் அங்காங்கே பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் திருச்சி, சென்னை என பல்வேறு ஊர்களுக்குச் செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடிய வாகனங்களை மதுரை மாநகர் வழியாகத் திருப்பி விடும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாநாட்டில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.