Skip to main content

மச்சினி காதலை ஏற்காத மாமன் கொலை... குற்றவாளிகளை தேடிவரும் காவல்துறையினர்!! 

Published on 19/06/2021 | Edited on 19/06/2021
The murder of the uncle who did not accept the love of Machini ... The police who are looking for the culprits

 

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், புதுச்சேரி அருகேயுள்ள கோட்டக்குப்பத்தை அடுத்த சின்ன கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (31). இவர் அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் வெட்டுக் காயத்துடன் சாலையில் கிடந்தார். அவரைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் உயிரிழந்தார்.

 

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்வகுமாரின் மச்சினி லதா என்பவரை அதே பகுதியில் வசிக்கும் குப்புசாமி (27) என்பவர் காதலித்து வந்ததாகவும்,  இது பிடிக்காத செல்வகுமார் மச்சினி லதாவை மரக்காணம் பகுதியில் உள்ள ஒருவருக்கு நிச்சயம் செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குப்புசாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்வகுமாரை குடிப்பதற்கு அங்குள்ள முந்திரி தோப்பிற்கு அழைத்துச் சென்று குடிபோதையில் இருந்த செல்வகுமாரின் தலை மற்றும் உடம்பில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

 

இதில் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தக் காதல் விவகாரத்தால் கொலை நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதையடுத்து கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிவுசெய்து குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.