Municipal officer died by Corona

Advertisment

கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,227 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் நோயிலிருந்து குணமடைந்து 9,465 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக விருத்தாசலம் நகராட்சி துப்புரவு அலுவலர் குமார் நேற்று உயிரிழந்தார். கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த அவரை கடந்த 2-ஆம் தேதி சக ஊழியர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

Advertisment

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சொந்த ஊராக கொண்ட இவருக்கு 58 வயதாகிறது. இவருக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகனும்மகளும் உள்ளனர். தற்போது குடும்பத்துடன் திருச்சி கைலாஷ் நகரில் வசித்துவந்த நிலையில், விருத்தாசலம் நகராட்சியில் பணிபுரிந்ததால் விருத்தாசலம் தில்லை நகரில் தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். குமார் சுகாதாரப்பணிகள், துப்புரவு பணிகளுக்கு அதிகாரியாக செயல்பட்டு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இவர் கரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

ஏற்கனவே விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு கரோனாவுக்கு பலியாகி உயிரிழந்த அதிர்ச்சியிலிருந்து இப்பகுதி மக்கள் மீளாத நிலையில் மேலும் துப்புரவு அலுவலர் கரோனாவுக்கு பலியாகி இருப்பது இப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.