Skip to main content

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த மூவர் குழு!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

Mullaperiyar Dam  Central Water Resources Authority Primary Monitoring Committee

 

தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இந்த முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, கடந்த 2014- ஆம் ஆண்டு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையைக் கண்காணித்துப் பராமரிக்க மூவர் குழுவை நியமித்திருந்தது.

 

தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய, அணை பாதுகாப்பு அமைப்பின் முதன்மைப் பொறியாளர் குல்ஷன்ராஜ் உள்ளார். அதேபோல், தமிழக அரசின் பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், கேரள அரசின் பிரதிநிதியாக கேரள நீர்வளத்துறை செயலர் டி.கே.ஜோஸ் உள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி 28- ஆம் தேதி அன்று மூவர் கண்காணிப்புக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். இந்நிலையில், இந்த மூவர் கண்காணிப்புக் குழுவினர் இன்று (19/02/2021) முல்லைப் பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்தனர். 

 

Mullaperiyar Dam  Central Water Resources Authority Primary Monitoring Committee

 

மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் குல்சன் ராஜ், கேரள பிரதிநிதியான கேரள நீர்வளத் துறை செயலர் டி.கே.ஜோஸ், காவேரி தொழில் நுட்பக்குழுத் தலைவர் சுப்பரமணி மற்றும் துணைக்குழுவான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர்.

 

முன்னதாக கேரள மாநிலம், தேக்கடி படகுத் துறையில் இருந்து தமிழக படகில் மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் குல்சன் ராஜ் மற்றும் தமிழக அதிகாரிகளும், கேரள படகில் கேரள அதிகாரிகளும் அனணயை ஆய்வு செய்வதற்காகக் கிளம்பிச் சென்றனர். இக்குழுவினர் மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி, ஷட்டர் பகுதி, அணையின் நீர்க்கசிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். 

 

தமிழக அரசின் பிரதிநிதியாக உள்ள தமிழகப் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசகன் இந்த ஆய்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

136 அடியை தொட்ட முல்லை பெரியாறு; முதல் கட்ட எச்சரிக்கை விடுப்பு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 Mullai Periyar who touched 136 feet; First stage warning leave

 

முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதை அடுத்து முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபொழிந்து வருகிறது. நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நிர்வாகத்திற்கு தமிழக நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து அணை 138 அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், 140 அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட எச்சரிக்கையும் மற்றும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதிக்கு 1000 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.