Skip to main content

ஊரடங்கால் முடங்கிய முல்லைப்பூ விற்பனை... விவசாயிகள் வேதனை!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

Mullaipoo sale crippled by curfew ... Farmers in pain!

 

கரோனா ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் முல்லை பூக்களை விற்பனை செய்ய முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு முல்லைப்பூ வியாபாரிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

 

வேதாரண்யம் வட்டத்தில் கருப்பன்குளம், ஆதனூர், கோவில்தாவு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் முல்லைப் பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். முல்லைப் பூக்களை செடியில் இருந்து பறிக்காமல் விட்டால் செடிகள் வீணாகிவிடும் என்பதால் கிலோவிற்கு 50 ரூபாய் கொடுத்து பூக்களைப் பறித்து கீழே கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

மாட்டுப் பொங்கல் நாளில் களை கட்டிய மீன் விற்பனை

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Sale of  fish on Mattu Pongal day

இன்று தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் விழா கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் வேதாரண்யத்தில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் திரண்டனர். இதனால் அதிகப்படியான மீன் விற்பனை நடைபெற்றது.

வேதாரண்யம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் இன்று காலை முதலே மக்கள் அலை அலையாக கூடினர். வஞ்சிரம், காலா, வாலை, அயிலை, திருக்கை,சங்கரா, வவ்வால், நெத்திலி, கிழங்கான் ஆகிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். வௌவால் மீன் கிலோ ரூபாய் 1100 க்கும், வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்க்கும், இறால், நண்டு ஆகியவை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சில பகுதிகளில் மாட்டுப்பொங்கல் அன்று அசைவம் சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருக்கும் நிலையில் மீன் வியாபாரம் இன்று களைகட்டியுள்ளது. அதேபோல் கும்பகோணத்தில் உள்ள பெரியார் மீன் அங்காடியிலும் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, சண்டை உள்ளிட்ட மீன்கள் மட்டுமல்லாது கடல் மீன்களும் விற்பனைக்கு குவிக்க வைக்கப்பட்டது. விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்த போதிலும் மக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். இதேபோல் செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் இன்று அலை மோதியது.