Skip to main content

முல்லைப் பெரியாறு அணை; “தென்மாவட்ட மக்களைத் திரட்டி போராட்டம்..” - ஓ.பி.எஸ்.

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

Mullai periyar dam "Struggle to mobilize the people of the Southern District." - O.P.S.

 

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்குத் தண்ணீர் திறந்து விட்டதைக் கண்டித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பாக கடந்த வாரம் லோயர் கேம்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நான்கு அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். 

 

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்குத் தண்ணீர் திறந்ததைக் கண்டித்து பா.ஜ.க. மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதனடிப்படையில் நேற்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     அதைத் தொடர்ந்து கம்பத்தில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பத்தில் நடைபெற்றது.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ்., “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் காட்டியவர் ஜெயலலிதா. ஆனால், பெற்றுத்தந்த உரிமையைக் காக்க முடியாமல் 139.5 அடியாக திமுக அரசு குறைத்துவிட்டது. இந்த முல்லைப் பெரியாறு அணை கட்டும் போது இரண்டு முறை தோல்வியை தழுவியதால் அப்போதைய இங்கிலாந்து அரசு அணை கட்டுமான பணிகளுக்கு பணம் தர மறுத்தது. உடனே பென்னிகுக், தனது நகைகள், சொத்துக்களை விற்று அணையை கட்டினார். 

 

அதன் அடிப்படையில்  999 ஆண்டுகளுக்கு அணையின் நீரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. அது இன்று வரை அணை நம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணை தென்மாவட்ட மக்களின் ஜீவநாடியாக திகழ்கிறது. இந்த நிலையில், 2000ஆம் ஆண்டில் கேரள அரசும் அங்குள்ள சில பத்திரிகைகளும் அணை பலமாக இல்லை என்று வதந்திகளை பரப்பியது. 2001 முதல் 2006 வரை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா கேரள அரசிடம் பேசி, அணையின் பராமரிப்பு பணிகளை முழுமையாக செய்து அணையை புதுப்பொலிவாக மாற்றினார். அப்போது பராமரிப்பு பணிகளுக்காக அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் அணையின் நீர் மட்டத்தை மீண்டும் உயர்த்த கேட்டதற்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

 

அதன் பிறகு தொழில்நுட்பக் குழுவினரின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கேட்டது. தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து, அணை பலமாக இருப்பதாக பரிந்துரை செய்தது. அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். என்றும் பேபி அணையை பராமரிப்பு செய்த பின் 152 அடியாக உயர்த்தலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு பின் 2006ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் கேரள அரசு சட்டசபையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி கேரள அணைகள் பாதுகாப்பு மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதில் கேரளாவில் உள்ள அணைகளின் நீர் மட்டத்தை நிர்ணயம் செய்தது. அதேபோல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயம் செய்தது. உடனே ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் மனு செய்து இந்த மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது என்று வாதிடப்பட்டது. 

 

Mullai periyar dam "Struggle to mobilize the people of the Southern District." - O.P.S.

 

அந்த நேரத்தில் தான், திமுக ஆட்சிக்கு வந்தது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் எதையும் செய்யவில்லை. 2012ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். 2013ல் கேரளா, மீண்டும் பூகம்பம் ஏற்படும் என்ற சந்தேகத்தை கிளப்பியது. உச்சநீதிமன்றம் மீண்டும் தொழில்நுட்பக் குழுவினரை அனுப்பியது. அவர்கள் பூகம்பம் ஏற்பட்டாலும் பெரியாறு அணைக்கு ஆபத்து இல்லை என்றனர். பேபி அணையை பலப்படுத்த ரூ.6.5 கோடி விடுவிக்கப்பட்டது. ஒப்பந்தம் கோரப்பட்டு ஒப்பந்தக்காரர் இறுதி செய்யப்பட்டார். மணல், ஜல்லி, கம்பிகள் ஆகியவை வல்லகடவு வனப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால், அங்குள்ள மரங்கள் சிலவற்றை வெட்டினால் தான் பணி செய்ய முடியும் என்று ஒப்பந்தக்காரர் கூறிவிட்டார். 

 

மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதிக்கவில்லை. இதற்கிடையே 2013ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி சாதனை படைத்தார். ஆனால் இப்போது திமுக அரசு 139.5 அடியாக குறைத்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து உள்ளது. 142 அடியாக உயரும் முன்பு தண்ணீரை திறந்துவிட்டது. ஏன்? அதற்கு உத்தரவிட்டது யார்? அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு என அனைத்தும் நம்மிடம் உள்ளது. அதுபோல் 142 அடியாக உயர்த்த நமக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அப்படி இருக்கும் போது 139.5 அடியாக இருக்கும்போதே ஏன் தண்ணீரை திமுக அரசு திறந்துவிட்டது. இது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகம் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவார்கள். அதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். நாம் பெற்றுத்தந்த உரிமையை காப்பதும் நமது கடமையாகும். அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவில்லை என்றால் தென்மாவட்ட மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்று பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மாவட்டச் செயலாளர் சையது கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.