Skip to main content

இந்த 4 பேரில் யாரோ ஒருவர்தான் அவரை கடத்தியிருக்க வேண்டும்: முகிலன் மனைவி...

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன். ஆரம்ப காலக்கட்டத்தில் புரட்சிகர இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் முகிலன். பிறகு சில வருடங்களுக்கு முன்பு கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து கூடங்குளம் சென்ற முகிலன், அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நிர்வாகியாக பங்கு பெற்று வந்தார்.
 

இவர் மீது ஏராளமான வழக்குகளை காவல்துறை போட்டுள்ளதோடு, ஒரு வருட காலம் சிறையில் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் முகிலன் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் இருந்து காணாமல் போயுள்ளார்.
 

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திலும், பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் என பல்வேறு போராட்ட இயக்கங்களில் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் முகிலன். 

 

mukilan


 

சென்ற வாரம் தனது வீட்டுக்கு வந்த முகிலன், அங்கிருந்து கிளம்பும்போது சென்னை சென்றுவிட்டு அங்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை காவல்துறை திட்டமிட்டே கொலை செய்துள்ளதை ஆதாரத்துடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அம்பலப்படத்துகிறேன் என்று கூறியவர், பிறகு சென்னையில் இருந்து மதுரை செல்வதாகவும் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
 

அந்த அடிப்படையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அவரது டாக்குமெண்டரியை சென்னை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். 13 பேர் கொலை திட்டமிட்டு செய்யப்பட்டது எனவும் ஆதாரத்துடன் குறிப்பிட்டார். பேட்டி முடித்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் இப்போது நான், அரசும், காவல்துறையும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு செய்த படுகொலையை அம்பலப்படுத்திவிட்டேன். இனி எனக்கு எதுவும் நடக்கலாம் என கூறிவிட்டுத்தான் சென்றுள்ளார்.
 

அதன் பிறகு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் சென்றுள்ளார். ஆனால் அடுத்த நாள் முகிலன் மதுரை செல்லவில்லை. திடீரென முகிலன் கடத்தப்பட்டாரா? அப்படியென்றால் அவரை யார் கடத்தினார்கள் என பெரும் பரபரப்பு தமிழகம் முழுக்க சூழலியல் ஆதரவாளர்களிடம் எழுந்தது. 
 

இந்த நிலையில்தான் முகிலனின் மனைவி திருமதி பூங்கொடியை அவரது சொந்த ஊரில் சந்தித்தோம். அப்போது அவர், என் கணவர் இந்த வாரம் வீட்டுக்கு வந்திருந்தார். சிறிது உடல்நிலை சரியில்லாமலும் இருந்தார். நான் அவரிடம் இப்படியே தொடர்ந்து அங்கும் இங்கும் ஏன் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்? கொஞ்சம் ஓய்வெடுங்கள் என கூறினேன். அதற்கு அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக என்னிடம் உள்ள ஆதாரத்தை சென்னை சென்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டுவிட்டு அடுத்து ஒரே ஒரு வேலை பாக்கியிருக்கிறது. அது சிறையில் உள்ள  ஏழு பேர் விடுதலைதான். அதற்கு பேரறிவாளன் தாயார் உள்பட சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினரை ஒன்றிணைத்து அவர்களை மக்கள் முன்பு பேச வைப்பதுதான். அதற்கான வேலைக்குத்தான் மதுரைக்கு செல்கிறேன். ஏழு பேர் விடுதலையான பிறகு அதிக நாள் வீட்டில் இருப்பேன் என்று கூறினார். அதன் பிறகு சென்ற அவர் மதுரைக்கும் போகவில்லை.
 

மதுரையில் இருந்து தோழர்கள் தொலைபேசியில் கூறியபோதுதான் தெரியும். அதன்பிறகு சென்னையில் தோழர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அதற்கு நீதிமன்றம் 22ஆம் தேதிக்குள் எனது கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. எனது கணவருக்கு தனிப்பட்ட எந்த பகையும் இல்லை. அவருக்கு எதிரி என்றால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், மணல் மாபியாக்கள், இந்த அரசாங்கம், அடுத்து போலீஸ்தான். இந்த நான்கு பேரில் யாரோ ஒருவர்தான் அவரை கடத்தியிருக்க வேண்டும். அவரது உயிருக்கு இந்த நான்கு பேர்தான் உத்திரவாதம். மற்றப்படி தனிப்பட்ட எந்த பிரச்சனையும் அவருக்கு இருந்ததாக எனக்கு முழுமையாக தெரியவில்லை. அதேபோல் அவர் நிச்சயம் தலைமறைவாக எந்தக் காரணத்திற்காகவும் இருக்க மாட்டார். 
 

நீதிமன்றத்தில் போலீசார் அவரை ஆஜர்படுத்தவில்லை என்றால், எதாவது விபரீதம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் எங்களுக்குள் எழுந்துள்ளது என கூறினார்  பூங்கொடி.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.