திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே இருக்கக்கூடிய காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது.
மதுரையிலிருந்து திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள் மோடியைச் சந்தித்து வரவேற்றனர். பாஜக சார்பிலும் பொன். ராதாகிருஷ்ணன் போன்றோர் மோடியைச் சந்தித்து வரவேற்றனர்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் முக.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்ற இருக்கின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “குஜராத்தில் பிறந்து இந்தியத் தேசத்தின் தந்தையாக வளம் வந்த காந்தியடிகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம். தனது வாழ்நாளில் 26 முறை தமிழகத்திற்கு வந்த காந்தியடிகள் தமிழை விரும்பி கற்றவர். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைக் கற்க வேண்டும் எனச் சொன்னவர்.
உயராடையை அணிந்து அரசியலுக்குள் நுழைந்த அவரை அரையாடை கட்டவைத்த இந்தத் தமிழ்மண் வட இந்தியர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழி கற்க வேண்டும் அது தமிழாக இருக்க வேண்டும் எனச் சொன்னவர் காந்தியடிகள்.
தமிழகத்தில் மாநில அரசின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் திகழ்கிறது. இதை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் மாநில அரசு மேலும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது. பல புதிய திட்டங்களின் மூலம் அனைவரும் உயர்கல்வி பெறத் தமிழக அரசு ஆவண செய்து வருகிறது.
இத்திட்டங்கள் தமிழக எல்லையைத் தாண்டி பல மாநிலங்களாலும் கவனிக்கப்படும் திட்டங்களாக இருக்கிறது. கல்வியை மாநில படியலுக்குள் கொண்டு வரப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.