Advertisment

"ஏ.... தமிழ்நாடே இன்னுமா உறக்கம்...?"-திருப்பூர் கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் அறைகூவல்!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இரு அவையிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

Advertisment

 MP Subbarayan Condemned CAB

இந்த சட்டத்தால் மக்கள் மத ரீதியாக பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே குழி தோண்டி புதைக்கும் பிரிவினைவாத பாதையை மத்திய அரசு ஏற்படுத்திவிட்டது என்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் இந்த சட்டத்திற்கு எதிராத மாணவர்களின் போராட்டம் நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யுமான திருப்பூர் கே.சுப்பராயன், தனது முகநூலில் 'இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனியும் பொறுத்திட வேண்டாம் போராட களத்திற்கு வா' என கவிதை வடிவில் கூறி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த கவிதையில்,

"கொதிக்கிறது வடக்கும், வடகிழக்கும்!

குமுறி எழுகிறது!

பாஜகவின் கோட்டை கொத்தளங்கள், கலகலக்கின்றன!

நாடே திமிரி எழுகிறது!

விஷக் கருத்திற்கும், விஷமத்தனத்திற்கும்

பிறந்த பித்தலாட்டப் பேர்வழிகளின்

துஷ்டக் கூடாரமான,

ஆர்.எஸ்.எஸ். அரண்டு கிடக்கிறது!

பழம் பெருமைகளில்,

பெருமிதங்களில் மூழ்கிக்கிடக்கும்,

ஏ..தமிழ்நாடே...,

இன்னுமா உறக்கம்?

வழி வழிவந்த உன் மறத்தனம் எங்கே?

கையிருப்பைக் காட்ட,

சிறுத்தைகளே. வெளியே வா! வா!

இந்திய தேசிய இனங்களின்,

மொழிகளின் பண்பாட்டு மூலங்களுக்கு

கொள்ளி வைக்கிறது பாஜக!

ஒரே நாடு! ஒரே மதம்! ஒரே மொழி!

ஒரே சாதி! ஒரே கட்சி!

என்ற படுபாதகப் பள்ளத்தாக்கை நோக்கி

நாட்டை இழுத்துச் செல்கிறது!

மேல் வருண ஆதிக்கத்தை

நிலைநிறுத்த முயலும் பாஜக,

வர்ணாஸ்ரம உள்ளடக்கம் கொண்ட,

மனுதர்ம? அடிப்படையிலான

புதிய அரசியல் சட்டத்தை,

தயாரித்து வருகிறதாம்!

ஏ... தமிழ்நாடே...

காலத்தில் களத்திற்கு வா!

காரியமாற்று!

பாதிக்கப்பட்ட சகல தரப்பையும் ஒன்று படுத்து!

இதுவே இறுதிப்போராக அமையட்டும்!

நாசிகளுக்கும், ஃபாசிஸ்டுகளுக்கும்

முடிவுரை எழுதுக!

முனையிலே முகத்து நில்!"

என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
student protest Tamilnadu Condemned communist party citizenship amendment bill
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe